என்னய்யா இது?.. அசிங்கமா இல்ல.. பாரதிராஜா வீட்டில் விளாசிய தியாகராஜன் குமாரராஜா.. என்ன நடந்தது?
சென்னை: இயக்குநர் பாரதிராஜா நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று தேவதானிப்பட்டி பகுதியில் இருக்கும் காட் ரோடு பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமிருந்து பலரும் அங்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் தியாகராஜன் குமாராஜா செய்த செயலால் அவருக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டு குவிந்துவருகிறது.
பாரதிராஜாவுக்கு இயக்குநராக மார்க்கெட் போனதைத் தொடர்ந்து நடிகராக மாறினார். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் அவர் சென்னைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மார்க்கெட் போன பிறகு குணசித்திர நடிகராக மாறிய அவர்; படு பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தார். வயது ஏறினாலும் இளைஞராகவே அவர் மின்னிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோர்ந்து போன இமயம்: அப்படிப்பட்ட சூழலில்தான் அவர் தன்னுடைய மகன் மனோஜை இழந்தார். உடல்நல குறைவால் கடந்த வருடம் மனோஜ் உயிரிழந்துவிட; இயக்குநர் இமயத்துக்கு மன சோர்வு ஏற்பட்டுவிட்டது. இதனால் அனைத்தையும் இழந்தவர் மாதிரியான மனநிலைமைக்கு சென்றுவிட்டார். அவரை பழையபடி மீட்டு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. போதாக்குறைக்கு அவருக்கு உடல்நல குறைவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் சிகிச்சையும் சேர்ந்துகொண்டது.
சரிந்த இயக்குநர் இமயம்: ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் தன் மூச்சை நிறுத்தினார். அவருக்கு வயது 84. முதலில் சென்னை நீலாங்கரை வீட்டில் அவர் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். விஜய், மு.க. ஸ்டாலின்,ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல தரப்பட்ட பிரபலங்கள் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினார். பலருக்கும் பாரதிராஜா நெருக்கம் என்பதால் பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் ஏற்பட்ட இழப்பாகவே இதனை பார்த்தார்கள்.
பண்ணை வீட்டில் பாரதிராஜா: தொடர்ந்து பாரதிராஜாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் விதமாக வத்தலகுண்டு தேவதானிப்பட்டி அருகே இருக்கும் காட் ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. முதல் மரியாதை கொடுத்தவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பலரும் அங்கே சென்றிருக்கிறார்கள். அவர்கள் கண்ணீரோடு தங்களது அஞ்சலியையும், மரியாதையையும் செலுத்தியிருக்கிறார்கள்.
தியாகராஜன் குமாரராஜாவுக்கு பாராட்டு: இந்நிலையில் பிரபல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா செய்த செயல் ஒன்று பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அதாவது நேற்று சென்னையில் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் சென்றார். அப்போது அவருக்கு முன் ஒருவர் கேமராவை தூக்கிக்கொண்டு நிற்க; காண்டான இயக்குநர், 'என்னய்யா இது.. அசிங்கமா இல்ல' என ஒரு காட்டு காட்டிவிட்டு சென்றார். இதை பார்த்த ரசிகர்கள், 'துக்க வீட்டில் கேமராவை தூக்கிக்கொண்டு வரும் வியூஸ் வெறி பிடித்தவர்களுக்கு இந்த மாதிரியான ட்ரீட்மென்ட்தான் சரி' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
