இன்னும் கோமாவில் ஜெகதி!

மலையாள திரைஉலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெகதிஸ்ரீகுமார், இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு காரில் சென்ற போது, மலப்புரம் தென்னிப்பாலம் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவரது கார் டிரைவர் அனில்குமாரும் பலத்த காயம் அடைந்தார். அவர்களை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து கோழிக்கோட்டில் உள்ள மிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெகதிஸ்ரீகுமாருக்கு டாக்டர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். மேலும் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை கண்காணித்து வந்த டாக்டர்கள் அவருக்கு அவசரமாக நேற்று அறுவைச் சிகிச்சை செய்யத் தீர்மானித்தனர். ஆனால் நேற்று இரவு வரை அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.
இதனால் ஜெகதிஸ்ரீகுமாருக்கு மேற்கொள்ள வேண்டிய அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் தள்ளி வைத்தனர்.
இது பற்றி மிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறும் போது, ஜெகதிஸ்ரீகுமாரின் உடல் நிலை அதே நிலையில்தான் உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் முழுமையாக அபாய கட்டத்தை தாண்டவில்லை. 24 மணி நேரமும் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில்தான் உள்ளார்," என்றனர்.
ஜெகதியின் உடல்நிலை மலையாளத் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











