ஜனநாயகன் ஒருவழியா ரிலீஸ் ஆகிடுச்சு.. காட்டுக்குள் கதை விவாதம் நடத்திய வினோத்.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களோடு ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும்பாலானோர் எமோஷனலாக தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள். இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் கதை விவாதம் நடந்த விதம் குறித்து இயக்குநர் இரா.சரவணன் பகிர்ந்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன்; சென்சார் பிரச்னை, லீக்கான பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தது. ஒருவழியாக ஏ சான்றிதழோடு நேற்று திரையரங்குகளில் வெளியானது. பகவந்த் கேசரியின் அப்பட்டமான ரீமேக்காக இல்லாமல்; 50 சதவீதம் அந்தக் கதை; 50 சதவீதம் புதிய கதை என வந்திருக்கிறார் வினோத். படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் எமோஷனலான பார்வை இருந்தாலும்; பொதுவான ரசிகர்களுக்கு பெரும்பாலும் படம் பிடிக்கவில்லை.

ஓவர் மசாலா?: இது தெலுங்கு படத்தின் தாக்கத்தில்தான் உருவாகியிருக்கிறது; ஆனாலும் தெலுங்கு வாடை அப்படியே அடிக்கிறதே என நொந்துகொண்டார்கள் பலர். அதேசமயம் விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் மட்டும்தான் படத்தை காப்பாற்றுவதாகவும் ஒரு கருத்து பலமாக எழுந்திருக்கிறது. விமர்சன ரீதியாக ஜஸ்ட் பாஸாகியிருக்கும் ஜனநாயகன்; வசூலில் சக்கைப்போடு போடுகிறது. முதல் நாளான நேற்று உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக சாக்நில்க் இணையதளம் தெரிவித்திருக்கிறது.
எமொஷனலான ரசிகர்கள்: அதேபோல் இதுதான் விஜய்யின் கடைசி படமாகும். எனவே இதனை எமோஷனலாகவே அணுகியிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். படம் முடிந்த பிறகு விஜய் பற்றிய வீடியோ க்ளிப்பிங்குகளும், இனிமேல் வரமாட்டேன் என்ற வசனமும் அவர்களை கதறி அழுக வைத்திருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் அவ்வாறே செய்தார்கள். இந்நிலையில் இந்தப் படத்தின் கதை விவாதம் நடந்த விதம் குறித்து இயக்குநர் இரா.சரவணன் ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
சரவணனின் பதிவு: அவர் தன் முகநூல் பக்கத்தில், "வா போகலாம்..." என்றுதான் அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவருடைய உதவி இயக்குநர்கள் இருவர், நான் என நான்கே பேர். விஜய் சார் பட கதை விவாதம் என்றார்கள். பெரிய ஹோட்டலில் ரூம் போட்டுத்தானே கதை விவாதம் நடக்கும். இவர் ஒரு மலைப்பகுதியின் குடிசை வீட்டுக்குக் கூட்டிப் போனார்.
எளிய இடம், எளிய உணவு எனக் கிட்டத்தட்ட ஒரு சாமியார் கணக்காகத்தான் வாழ்ந்தார். பேய்த்தனமாகப் பேசி, விவாதித்து முழு நிறைவு வந்த ஒரு நாளில், நிம்மதியாய் பாறைகளின் மேல் படுத்து உறங்கினார் வினோத். "இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிடச் சிறியவர்கள்..." எனச் சொல்லிச் சொல்லி, எதையுமே தலைக்கு ஏற்றிக்கொள்ளா தன்மையோடு வாழும் தம்பி வினோத் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார். 'ஜனநாயகன்' வெல்லட்டும்; ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications

