கையெடுத்து கும்பிடுறேன்.. வேணும்னா நடிச்சு தரோம் சர்க்கஸ் ஆக்காதீங்க.. பாக்யராஜ் வீட்டில் கதறிய ராதிகா
சென்னை: பாக்யராஜ் உயிரிழந்த சம்பவத்தை யாராலும் இன்னமும் நம்ப முடியவில்லை. சில வாரங்கள் முன்புதான் அவரது குருநாதர் பாரதிராஜா உயிரிழந்தார். நேற்று முன்தினம் கூட அவர் குஷ்புவின் மகள் திருமணத்தில் பங்கேற்றிருந்தார். ஆனால் இன்று அவர் நம்மிடையே இல்லை என்பதை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமா அடுத்தடுத்து தாங்க முடியாத அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு அவரின் சிஷ்யரான பாக்யராஜும் வந்திருந்து; கண்ணீரோடு தன்னுடைய குருநாதரை வழியனுப்பி வைத்தார். அதிலிருந்து எப்படி மீள்வார் அவர் என எல்லோருமே நினைத்திருந்தார்கள்.

உயிரிழந்த பாக்யராஜ்: ஆனால் யாருமே நினைக்காத வகையில் அவரே இன்று உயிரிழந்துவிட்டார். இன்று காலையில் அவர் தன்னுடைய வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வயது அவருக்கு 73 ஆகும். அவரது உயிரழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அரசு மரியாதையுடன் தகனம்: பாக்யராஜின் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவிருக்கிறது. அதுவரை பிரபலங்களும், மக்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கிறார்கள். கோலிவுட்டிலிருந்து மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலிருந்தும் பலர் நேரில் வந்து திரைக்கதை மன்னனின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூழ்ந்த பத்திரிகையாளர்கள்: சூழல் இப்படி இருக்க மருத்துவமனையிலிருந்து பாக்யராஜின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸிலிருந்து அவரது உடலை இறக்க முடியாதபடி பத்திரிகையாளர்களும், இன்னும் சிலரும் சூழ்ந்துகொண்டார்கள். ஏற்கனவே சோகத்தில் இருந்த நடிகை ராதிகா இதனை பார்த்து மேற்கொண்டு டென்ஷன் ஆகிவிட்டார். மேலும் அவர் கெஞ்சியதும் அங்கிருப்பவர்களை உருக வைத்தது.
என்ன சொன்னார்?: அதாவது அங்கு சூழ்ந்திருந்தவர்களை பார்த்து, "உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன். இங்கே வேண்டாம். உங்களுக்கு ட்ராமா வேண்டும், டிஆர்பி வேண்டும் என்றால் நாங்கள் தனியாக நடித்து தருகிறோம். தயவு செய்து எங்களுக்கு கொஞ்சம் பிரைவேசி கொடுங்கள் சார். தயவு செய்து இந்த சாவினை சர்க்கஸ் ஆக்காதீங்க" என கெஞ்சி கேட்டார். ஏற்கனவே பாரதிராஜா இறப்பின்போது கேமராவை தூக்கிக்கொண்டு வந்த ஒருவரை பார்த்து இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவும் கடிந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
ராதிகாவுடன் நல்ல நட்பு: பாக்யராஜை பொறுத்தவரை நடிகை ராதிகாவுடன் நல்ல நட்பில் இருந்தவர். ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயிலில் பாக்யராஜ்தான் முதன்மை உதவி இயக்குநர். ராதிகாவை முதலில் அந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு அவருக்கு விருப்பமே இல்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications
