ஷங்கர் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.. கோலாகல பூஜை.. யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா?
சென்னை: இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று முதல்முதலில் பெயர் எடுத்தவர் ஷங்கர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவருக்கு படங்கள் சரியாக போவதில்லை. அடுத்ததாக வேள்பாரி படத்தையும், குறைந்த நாட்களில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தையும் எடுக்கவிருக்கிறார். இந்நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
ராஜமௌலிதான் இப்போதைக்கு இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர். ஆனால் அந்தப் பெயரை முதலில் எடுத்தவர் ஷங்கர். அவர் இயக்கிய ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என பல படங்கள் மெகா ஹிட்டாகியிருக்கின்றன. முக்கியமாக அந்தப் படங்களில் ஒரு பாடலிலாவது பிரமாண்டமான விஷயங்களை வைத்துவிடுவார். அதை பார்த்து அப்போதைய இந்திய திரையுலகமே ஆச்சரியப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

சறுக்கிய ஷங்கர்: இப்படி முழு வீச்சில் சென்றுகொண்டிருந்த ஷங்கருக்கு எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2.0 படத்திலிருந்தே நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் படம் படுதோல்வியடைந்ததை அடுத்து; அவர் இயக்கிய இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களுமே மோசமான தோல்வியையும், ட்ரோல்களையும் சந்தித்தன. அடுத்ததாக அவர் வேள்பாரி படத்தை பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்கும் முன்னதாக, குறுகிய காலத்தில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறாராம். இனிவரும் படங்களாவது பழைய ஷங்கரை மீண்டும் அழைத்து வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஷங்கர் வாரிசுகள்: இதற்கிடையே ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார். மூத்த மகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட; இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். பாடகியாகவும் ஜொலித்துவருகிறார். ஷங்கரின் மகன் அர்ஜித்தை பொறுத்தவரை; ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். தன்னிடம் வேலை பார்ப்பது அவ்வளவு சரியாக இருக்காது என்று முடிவெடுத்த ஷங்கர்; முருகதாஸிடம் சேர்த்துவிட்டார்.
ஹீரோ அர்ஜித்: உதவி இயக்குநராக பணியாற்றுவதால் விரைவில் அவர் இயக்குநராக ஜொலிப்பார் என்றுதான் எல்லோராலும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலம் போட்டு வைத்திருக்கும் கணக்கை யார்தான் கணிப்பார். அவர் இப்போது ஹீரோவாகிவிட்டார். இந்தப் படத்தை அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்த அஷோக் என்பவர் இயக்கவிருக்கிறார். க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
நேற்று நடந்த பூஜை: இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. படத்தை கேவிஎன் நிறுவனமும், பேஷன் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்க; புதுமுகம் ஒருவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறாராம். நேற்று நடந்த பூஜையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் ஹெச்.வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். முதற்கட்டமாக சென்னையில் ஒரு வாரம் படத்தின் ஷூட்டிங் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
