Anbe Diana First Review - எழுந்து நின்று கை தட்டினேன்.. அன்பே டயானா முதல் விமர்சனம் சொன்ன பிரபலம்
சென்னை: ஜமா படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான பாரி இளவழகன் இப்போது அன்பே டயானா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரோஜா, சேத்தன், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்திருக்கும் இப்படமானது ஜூலை 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இரா.சரவணன் தனது முதல் விமர்சனத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில், "கதைத் தேர்வில் எப்போதுமே 'மில்லியன் டாலர்' யுவராஜ் கதாநாயகன். 'அன்பே டயானா' கதை முடிவானபோது தம்பி பாரியை என் அலுவலகம் அனுப்பி வைத்திருந்தார். 'ஜமா' படத்திலேயே ஜமாய்த்திருந்த பாரி 'அன்பே டயானா' கதையைச் சொல்லி முடித்தபோது மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. பாரியே எழுதி இயக்கி நடிப்பதால் அவர் சொன்னதைவிடச் சிறப்பாகப் படம் வரும் என்று அப்போதே தெரிந்தது.

தங்கமான கதை: என் ஆச்சர்யமெல்லாம்... தம்பி யுவராஜ்தான்! வேறு எந்தத் தயாரிப்பாளராக இருந்திருந்தாலும் இந்தத் தங்கமான கதையை ஓகே பண்ணி இன்று டாப்பில் இருக்கும் ஹீரோ யாரையாவது கமிட் பண்ணி நடிக்க வைத்திருப்பார்கள். யுவராஜ் ஒரு தரமான தயாரிப்பாளராக பாரியின் விருப்பத்திற்குக் கூடுதல் மதிப்பும் நம்பிக்கையும் கொடுத்து டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடிக்க வைக்கும் விதமாய் அவரையே களமிறங்க வைத்திருக்கிறார்.
என்னவளுடன் அன்பே டயானா: எப்போதாவது ஷூட்டிங் பக்கம் போவேன். யூனிட் பேயாய் இயங்கிக் கொண்டிருக்கும். யுவராஜ் பித்துப் பிடித்த கணக்காகத் திரிவார். அவ்வப்போது அலுவலகம் வந்து படத்தின் முன்னேற்றம் குறித்துச் சொல்வார். சமீபத்தில் ஒருநாள், "படம் ரெடி சார்... பார்க்குறீங்களா?" என்றார். வானம் தூறல் போடத் துவங்கி சூழலை அவ்வளவு ரம்யமாக மாற்றிக் கொடுத்தது. என்னவள் கலாவுடன் 'அன்பே டயானா' பார்த்தேன்.
கொண்டாட்டமான படம்: வயிறு குலுங்கச் சிரித்து, ரோஜாவின் குடும்பத்தில் நாமும் ஒருவராகக் கலந்து, நெகிழ்ந்து, திக்குமுக்காடி கடைசி 20 நிமிட அலப்பறையில் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரித்தேன். ஏற்கெனவே நான் கேட்டிருந்த கதைதான்... ஆனாலும், அடுத்து அடுத்து எனப் படம் பரபரக்க வைத்துவிட்டது. எழுத்தாக இயக்கமாகப் பட்டையைக் கிளப்பியிருக்கும் பாரி இளவழகன் 'அன்பே டயானா'விற்குப் பிறகு முன்னணி ஹீரோவாக நிச்சயம் வலம் வருவார். ரோஜா மேடமும் சேத்தன் சாரும் திருவிழா நடத்தி இருக்கிறார்கள்.
பெரம்பூர் மண்ணின் பதிவு: நிச்சயம் அத்தனை கதாபாத்திரங்களும் நெஞ்சில் நிற்கும். பாடல்கள் மயக்குகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சென்னை பாஷை எனப் படம் முழுக்கப் பலவிதமான மொழிகளின் கலவை இதுவரை தமிழ் சினிமா காணாத கதம்பக் கச்சேரி! முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியைத் தன்னுடைய களமாக ஏன் தேர்ந்தெடுத்தார் என்று இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபோதுதான் புரிந்தது. பெரம்பூர் மண்ணின் காலத்திற்குமான பதிவு இந்தப் படம்.
மனம் முழுக்க சிலிர்க்கிறது: எல்லாவற்றையும் தாண்டி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அவலத்தைச் சொல்ல புரட்சிகரமான திரைக்கதை பாதையைத் தேர்ந்தெடுக்காமல், கொண்டாட்டமும் கும்மாளமுமாய்ச் சொல்லியிருக்கும் விதம் மகத்தானது. பட்டாம்பூச்சியை மையப்படுத்திய கதை என்பதாலோ என்னவோ, மனம் முழுக்கப் பறந்து சிலிர்க்கிறது.
அத்தனை பேரின் படம்: தம்பி யுவராஜை கட்டி அணைத்துக் கொண்டேன். சினிமாவைக் கடலளவு நேசிக்கிற தம்பி இன்னும் இன்னுமாய்ப் பெருவெற்றி பெற வேண்டும். 'மில்லியன் டாலர்' நிறுவனத்தின் தரமான வெற்றிகளில் 'அன்பே டயானா' தங்கக் கீற்றாக நிச்சயம் ஜொலிக்கும்! நிற்க,இந்தப் படத்தின் மூலமாக யுவராஜின் 'மில்லியன் டாலர்' நிறுவனத்துடன் நம் 'Era Entertainment' நிறுவனமும் கைகோக்கிறது. "உன்னோட படம்கிறதாலதான் இந்தளவுக்குப் புகழ்ந்து எழுதினாயா?" என நீங்கள் கேட்கலாம். 'அன்பே டயானா' நம் அத்தனை பேரின் படம்" என குறிப்பிட்டிருக்கிறார். இதனை படத்தின் முதல் விமர்சனம் என்று இயக்குநர் பாரி இளவழகனும் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
