ஒரு படம்.. ஆறு பேர் இயக்குநர்கள்.. பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரத்தில் செம சர்ப்ரைஸ் இருக்கு
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது டயர் 1 ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த டியூட், டிராகன், லவ் டுடே ஆகிய மூன்று படங்களும் நூறு கோடி ரூபாயை அள்ளின. கடைசியாக நடித்த எல்ஐகே மட்டும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அவர் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்திருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். ரவி மோகன் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் பிரதீப்புக்கான ஹீரோ கதவுகள் திறந்தன. அதன்படி டிராகன், டியூட் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

முதல் தோல்வி: அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகனும், கீர்த்திஸ்வரன் இயக்கிய டியூடும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தன. தொடர்ச்சியாக மூன்று படங்கள் நூறு கோடி ரூபாயை அள்ளியதால்; டாப் 10 ஹீரோக்களுக்குள் ஒருவராக மாறினார் பிரதீப். அப்படிப்பட்ட சூழலில்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இதுதான் அவருக்கு முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அவதாரம் எப்போது?: அடுத்ததாக டிராகன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவர் எப்போது மீண்டும் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. அவரிடம் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் கதை இருப்பதாகவும்; அதை தயாரிக்க நூறு கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் தேவைப்படும் எனவும்; அதனை வேல்ஸ் நிறுவனமோ அல்லது ஏஜிஎஸ் நிறுவனமோ தயாரிக்கலாம் என கூறப்பட்டது.
தயாரிப்பாளர் அவதாரம்: இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார். அதன்படி PR Show என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். தன்னிடம் உதவி இயக்குநர்களாக இருந்த ஆறு பேரை ஆல்ஃபா யூனிட் என்று பெயர் வைத்து இந்தப் படத்தில் இயக்குநர்களாக அறிமுகம் செய்கிறார். அந்தப் படத்தில் அஷ்வத் மாரிமுத்து, மமிதா பைஜூ, சுவாசிகா, சிவாஜி சொந்தினேனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
புதிய முயற்சி: இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அவரிடம் மொத்தம் எட்டு உதவி இயக்குநர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சுபாஷ் பிளாஸ் படத்தை இயக்கியும், மரிய ராஜா இளஞ்செழியன் ஹேப்பி ராஜ் படத்தை இயக்கியும் இயக்குநர்களாகிவிட்டார்கள். இப்போது மீதம் இருக்கும் ஆறு பேரையும் ஒரே படத்தின் மூலம் இயக்குநர்களாக களம் இறக்கியிருக்கிறார். ஆறு பேர் சேர்ந்து இந்தப் படத்தை இயக்கவிருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு இப்போதே அதிகாரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
