கருப்பு ஹிட்டாகியும் பஞ்சாயத்து தீரவில்லை.. திருப்பூர் சுப்ரமணியத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி
சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கருப்பு. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இதற்கிடையே படத்தின் ரிலீஸ் சில பிரச்னைகள் காரணமாக ஒரு நாள் தாமதமானது. சூழல் இப்படி இருக்க அதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியம் சில நாட்களுக்கு முன்பு பேசியது சர்ச்சையை ஏற்படுத்த; ஆர்.ஜே. பாலாஜி இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.
கருப்பு திரைப்படம் கடந்த மே மாதம் ரிலீஸானது. முதலில் 14ஆம் தேதி வெளியாவதாக இருந்த அந்தப் படம்; சில பிரச்னைகள் காரணமாக ஒரு நாள் தாமதமாகி 15ஆம் தேதி ரிலீஸானது. 14ஆம் தேதி மாலை ஒரு வீடியோ வெளியிட்டிருந்த இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, 'கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கிறார்கள்' என்று அழுதபடி பேசியிருந்தார். தொடரந்து படம் ரிலீஸாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி: ஓடிடியிலும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் வரவேற்பை படம் பெற்றது. சூழல் இப்படி இருக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "கருப்பு திரைப்படம் வெற்றி பெற்றதும் படத்தின் இயக்குநர் காலரை தூக்கிவிட்டு சுற்றுகிறார். ஆனால் அந்தப் படத்தை வெளியிட இரண்டு நாட்கள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.
யாரும் வரவில்லை: சூர்யாவை தவிர்த்து அந்தப் படத்தின் சார்பில் இயக்குநரோ, பிற நடிகர்களோ, தொழில்நுட்ப கலைஞர்களோ யாருமே எந்தவித உதவியும் செய்ய வரவில்லை. ஆனால் இயக்குநரோ காருக்குள் அமர்ந்துகொண்டு அழுதபடியே வீடியோ போடுகிறார். இந்தப் படம் வெளியாக என்னுடைய பணத்தையும் போட்டிருக்கிறேன். எனக்கு அதில் 50 சதவீதம் மட்டும்தான் திருப்பி கிடைத்திருக்கிறது" என்றிருந்தார். அவர் இப்படி பேசியது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்.ஜே.பாலாஜி பதிலடி: இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் இதுகுறித்து பேசுகையில்,"இந்தப் படத்தை நான் முன்று ஆண்டுகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறேன். என் குடும்பத்தினருடன், தயாரிப்பாளர் குடும்பத்தினருடன் கோயிலுக்கும் சென்றோம். என்னுடைய பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தயாரிப்பாளர் என்னுடன் மகிழ்ச்சியாக வந்திருக்கமாட்டார். தயாரிப்பாளரே திருப்பூர் சுப்ரமணியத்துக்கு ஃபோன் செய்து, 'ஏன் சார் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்' என கேட்டிருக்கிறார்.
நேர்மையுடன்: ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் இந்தப் படத்தை மிகுந்த நேர்மையுடன் விளம்பரப்படுத்தினேன். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். சூர்யாவும் மைழ்ச்சி. முழு படக்குழுவும் மகிழ்ச்சி. திருப்பூர் சுப்ரமணியத்துக்கு பிடித்திருக்கிறதா, ஈரோடு மகேஷ், மதுரை முத்துவுக்கு பிடித்திருக்கிறதா என்பது முக்கியம் இல்லை. மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதைத்தான் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.
பலன் கிடைத்துவிட்டது: அவர் (திருப்பூர் சுப்ரமணியம்) ஒரு பெரிய மனிதர். அவர் தன்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறார். எனது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. நல்ல வருமானமும் கிடைத்திருக்கிறது. நான் கடுமையாக உழைத்தேன். என்னால் செய்ய முடிந்தது அது ஒன்றுதான். அதுதான் சரியான விஷயமும்கூட. அதிலிருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் கிடைத்துவிட்டது. எனவே எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
