மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ்.. பிரபல பாடகர் நேரில் சந்தித்து வாழ்த்து
சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் ஜொலிப்பவர் ஜிவி பிரகாஷ். சூரரைப் போற்று, வாத்தி படங்களுக்காக ஏற்கனவே தேசிய விருது பெற்றிருக்கிறார். இந்நிலையில் அமரன் படத்தில் சிறந்த பின்னணி இசையை வழங்கியதற்காக; மூன்றாவது முறையாக தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை கூறிவருகிறார்கள்.
ஜிவி பிரகாஷ் இசை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அவர் அறிமுகமான முதல் படம் வெயிலிலேயே அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கி அனைவரையும் கவர்ந்துவிட்டார். அதனையடுத்து ரஜினியின் குசேலன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களில் இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் அவரை டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியது. அதிலும் ஜிவியின் மெலோடிக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக ஜிவி: இசையமைப்பில் கலக்கிவந்த அவர்; நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ச்சியாக அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் லக்கி திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியானது. அதுவும் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இடி முழக்கம், இம்மார்ட்டல், மென்டல் மனதில் என ஏகப்பட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்தப் படங்கள் கண்டிப்பாக க்ளிக்காகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
தேசிய விருது: இதற்கிடையே இசையமைப்பாளராக அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேச்சு நெடுங்காலமாக இருந்தது. அதனை போக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வாங்கினார். அதனையடுத்து வாத்தி படத்துக்காகவும் தேசிய விருதை வென்றார். அடுத்தடுத்து இரண்டு முறை தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
மூன்றாவது விருது: சூழல் இப்படி இருக்க 72வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், அமரன் படத்தில் சிறந்த பின்னணி இசையை வழங்கியதற்காக தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறையாக விருது பெற்றிருப்பதை நினைத்து அவரும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் தன் வாழ்த்து செய்தியில், நம் குடும்பத்தின் 10வது தேசிய விருது என கூறியிருந்தார்.
வேல்முருகன் வாழ்த்து: இந்நிலையில் பிரபல பாடகர் வேல்முருகன் இன்று ஜிவி பிரகாஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த மாலையில் புத்தம்புது நாணயங்கள் கோர்க்கப்பட்டிருந்தன. வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி ஜிவிக்கு ஐயப்பன் கோயில் பிரசாதத்தையும் வழங்கினார். இந்த சம்பவத்தின்போது இசையமைப்பாளரும், ஜிவி பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவருமான ரகுநந்தன் உடன் இருந்தார்.


Click it and Unblock the Notifications

