ஜெய்பீம் தேர்வாகாததற்கு காரணம் இதுதானா?... ஆஸ்கர் விருது தமிழக படங்களுக்கு எட்டாக்கனியா?
ஆஸ்கர் விருது இந்தியத் திரைப்படங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. விருதுக்கு தேர்வாகி நாமினேஷனுக்குக் கூட தகுதி பெற முடியாமல் போன படங்களே அதிகம். இந்திய அளவில் பேசப்பட்ட பல படங்கள் ஆஸ்கருக்கு சென்று நாமினேஷன் கூட ஆகாமல் திரும்பியுள்ளது. தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய ஜெய்பீம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நாமினேஷனில் கூட படத்தை தேர்வு செய்யாமல் நிராகரித்துள்ளனர். ஆஸ்கர் விருது தமிழ் படங்களுக்கு எட்டாக்கனியா?என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆஸ்கர் இறுதி பட்டியலில் “ரைட்டிங் வித் ஃபயர்“…. இயக்குநரின் உணர்ச்சி பூர்வமான தருணம் !
ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஜெய்பீம், மரக்காயர், கூழாங்கல் போன்ற படங்கள் நாமினேஷனில்கூட வர முடியாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம் ஜெய்பீம். உலக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்ட படமாக ஜெய்பீம் இருந்தது. இது எந்த அளவுக்கு என்றால் ஆஸ்கர் விருது ஹோஸ்ட் ஜாக்குலினே அப்படத்தைப்பார்த்து வியந்துபோய் பதிவிட்டதுதான்.

ஏன் ஜெய்பீம் மட்டும் எதிர்ப்பார்க்கப்பட்டது
ஜெய்பீம் வெறும் திரைப்படமல்ல, அது சாமானிய மக்களுக்கு நடக்கும் கொடுமையையும், நிஜ சம்பவ பின்னனி அடிப்படையில் சொன்னது. ஒரு வழக்கறிஞர் சட்டத்தின் மூலம் போராடி நியாயத்தை பெற்றுத்தரமுடியும் என்பதை நம்பிக்கையாக சொன்னது. சாமானிய மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் செயலை படம் தெளிவாக உணர்த்தியது. இதனால் படத்துக்கு வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தது. ஆனாலும் படம் பேசப்பட்டது.

சாதித்த ஜெய்பீம்
ஜெய்பீம் படத்தின் கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்துவருவது அப்படத்திற்கு கிடைத்த வெற்றி. ஜெய்பீம் படத்தின் வழக்கறிஞர் பின்னர் நீதிபதியாகி ஓய்வுப்பெற்ற சந்துருவும், மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி இன்றும் நம்மிடையே அதற்கான சாட்சியாக இருப்பது படத்தை மேலும் வலுவாக்கியது. வலுவான திரைக்கதை, காட்சி அமைப்பு, சூர்யாவின் அசத்தலான நடிப்பு பார்ப்போர் மனதில் அழுத்தத்தை உண்டு பண்ணியது. கல்வி முறையாக கிடைத்தால் எளியோரும் சாதிப்பார்கள் என்பதை கடைசி காட்சியில் குழந்தை, சூர்யாமுன் கால்மேல் கால் போட்டு அமர்ந்து பத்திரிக்கை வாசிப்பதை காட்சிப்படுத்தி உணர்த்தியிருப்பார்கள்.

மக்கள் சக்தியை பேசிய படம்
அதிகார வர்க்கம் அடக்குமுறையை கையிலெடுக்கும்போது பாதிக்கப்படும் மக்கள் மவுனமாகிவிடுகின்றனர். சட்டத்தின் துணையை நாடாத அளவுக்கு அது எட்டாக்கனியாக, வசதியுள்ளவர்கள் அணுகும் நிலையில் உள்ளது. இந்நேரத்தில் சட்டம் பயின்ற வழக்கறிஞர் இலவசமாக வழக்கை கையிலெடுத்து சாதிப்பது போன்ற நம்பிக்கையை படம் ஊட்டியது. அதே போல் ஹீரோயிசம் இல்லாமல் மக்கள் போராட்டம் மூலம் பிரச்சினை முடிவுக்கு வருவதை அழுத்தமாக சொன்னப்படம் ஜெய்பீம். சாமானிய எழுத்தறிவில்லாத பெண் பாதிக்கப்படும்போது போராட்டக்களத்தில் வீரமங்கையாக மாறுகிறார் என்பதை டிஜிபியுடன் கதாநாயகி பேசும் வசனம் மூலம் நமக்கு உணர்த்தினர்.

இத்தனை பெருமைகள் இருந்தும் நிராகரிப்பா?
படத்தைப்பார்த்த என் மனதில் நெடுநேரம் அழுத்தமாக இருந்தது என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். மாநில முதல்வர் பொறுப்பில் இருப்பவர் பல சம்பவங்களை பார்த்திருப்பார் ஆனால் வலுவான திரைக்கதை, இயக்குநரின், நடிகர்களின் பங்கேற்பு அதை சாதித்தது எனலாம். இத்தகைய பெருமைக்குரிய படம் விமர்சனத்துக்கும் தப்பவில்லை. ஆனாலும் வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் ஆஸ்கர் சென்றபோது எதிர்ப்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால் நாமினேஷனில் கூட வர இயலாமல் நிராகரிக்கப்பட்டது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்கர் ஆங்கிலம் பேசும் படங்களுக்கு மட்டுமா?
இதனால் ஆஸ்கர் பட விருதுக்கு தேர்வான இந்தியப்பட வரிசையில் இப்படம் இடம்பெற்றபோது நாமினேஷன் ஆகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நாமினேஷனில் கூட தேர்வாகவில்லை. ஆஸ்கர் விருது பற்றி ஆஸ்கருக்கு அதிக முறை படையெடுத்த முக்கிய நடிகர் சொன்னது "ஆஸ்கர் விருது ஆங்கிலப்படம் எடுப்பவர்களுக்காக ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலப்பட கலைஞர்களுக்கு கொடுக்கும் விருது' என்றார். இந்தியர்கள் ஆஸ்கர் விருதுப்பெற்ற 'காந்தி', 'ஸ்லம் டாக் மில்லியனர்' படங்கள் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தான் என்பதால் அது சரியோ எனத் தோன்றுகிறது.

தமிழக சாதனையாளர்கள் மோதிப்பார்த்த ஆஸ்கர் விருது
உலக அளவில் மதிக்கப்பட்ட மார்லன் பிராண்டோ போன்ற கலைஞர்கள் போற்றிய சிவாஜி கணேசனின் தெய்வ மகன் படம் ஆஸ்கருக்குச் சென்றது. அன்றைய காலக்கட்டத்தில் உலகளாவிய திரைப்படங்கள் அளவுக்கு எடுக்கப்பட்டாலும் அதை கைகொள்வதில் தமிழக திரையுலகு இல்லாததால் மிகப்பெரிய கலைஞர்கள் ஆஸ்கரை எட்டாமல் போனார்கள். கமல்ஹாசன் உலக நாயகன் எனப்போற்றப்பட்டவர் அவரது 7 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு சென்றும் நாமினேஷனில் கூட தேர்வு பெறாமல் போனது. மணிரத்னம், ஷங்கர் போன்றோரும் சமீபத்தில் கூழாங்கல் படமும் முயன்றது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஜெய்பீம் நிராகரிப்பு இதனாலா?
ஜெய்பீம் ஒருவேளை ஆங்கிலத்தில் வந்திருந்தால் நாமினேஷனுக்குள் சென்றிருக்கும், ஏன் தேர்வுகூட ஆகலாம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஆனால் விருதுக்கான அவர்கள் எதிர்ப்பார்க்கும் தகுதிகள் ஏதாவது குறைவாக இருந்ததா? அல்லது தேர்வான படங்கள் ஜெய்பீமை விட சிறப்பாக இருந்ததா போகப்போக தெரியும். ஆனாலும் சூர்யா போன்ற கலைஞர்கள் முயற்சியும், உலக அளவில் தமிழ் சினிமாவின் முன்னேற்றமும் ஆஸ்கர் விருது தமிழக படங்களுக்கு எட்டாக்கனி அல்ல எனலாம்.


Click it and Unblock the Notifications











