பாரதிராஜாவை சாதிக்குள் அடைக்கிறாரா வைரமுத்து?.. இரங்கல் கவிதையில் பிழையா?.. கிளம்பிய பூதம்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரது சிஷ்யரான பாக்யராஜும் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அடுத்தடுத்து இரண்டு ஜாம்பவான்களை பறிகொடுத்து கதறிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. இந்நிலையில் வைரமுத்துவின் இரங்கல் கவிதை ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர் பாரதிராஜா. அவரை பார்த்துதான் பலரும் சினிமாவுக்கு தைரியமாக வந்தார்கள். அவர் போட்ட விதைகள் அத்தனையும் இன்று பலருக்கு இளைப்பாற்றும் விருட்சமாக வளர்ந்து நிற்கின்றன. சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாக்யராஜும் மரணம்: அவர் மறைவையே இன்னும் பலர் மறக்கவில்லை. அப்படிப்பட்ட நிலைமையில் பாரதிராஜாவின் சிஷ்யரான பாக்யராஜும் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக தனது 73வது வயதில் உயிரை விட்டார். ஒரே மாதத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு ஜாம்பவான்களை பறிகொடுத்து உச்சக்கட்ட சோகத்தில் இருக்கிறது தமிழ் சினிமா. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ஒரு இரங்கல் கவிதையை எழுதியிருக்கிறார்.
வைரமுத்து கவிதை: தன் எக்ஸ் பக்கத்தில், "இமயத்தைப்
புதைத்த இடம் இதுதான்
தூங்கு ராஜா தூங்கு
ஓடி ஓடிக் களைத்தவனே
கலையாத உறக்கத்தில்
கனவுகளற்ற உறக்கத்தில்
ஓய்வுகொள்
மண்ணை இழுத்துப் போர்த்துப்
படுத்திருக்கும் உன்னை
குளிரோ மழையோ
வெயிலோ புயலோ
ஒன்றும் செய்யாது
நலம் கேட்க வந்த நான்
நல்லசெய்தி
கொண்டுவரவில்லை
இதே இடத்தில்
என்னோடு நின்று
இறுதி மரியாதை செலுத்திய
உன் சீடன்
உனைத்தேடி வந்துவிட்டான்
ஜோடிக் குதிரைகளை இழந்து
கவிழ்ந்து கிடக்கிறது
கலைத்தேர்
கடமை இருக்கிறது
இந்த மண்ணகத்தில்
உனக்கொரு மணிமண்டபம்;
அரசுக்குக்
கோரிக்கை வைக்கிறேன்
முதலமைச்சர் விஜயைச்
சந்திக்கவும் தயங்கமாட்டேன்
இந்த இடம்
கலைக்கோயிலாக
என்று கட்டப்படுமோ
அன்று
தேனி மாவட்டம் முழுக்க
தேவர்கள் பூச்சொரிவர்" என குறிப்பிட்டிருக்கிறார்.
கிளம்பிய விவாதம்: அவரது இந்தக் கவிதை சோஷியல் மீடியாவில் பஞ்சாயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. அதாவது இந்த கவிதையின் கடைசி இரண்டு வரிகளில், குறிப்பிட்ட சாதியைத்தான் அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார். தேனி மாவட்டத்தில் அந்த சாதியினர் அதிகம்; அதுமட்டுமின்றி தானும், பாரதிராஜாவும் அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்; அதற்குள் இயக்குநர் இமயத்தை வைரமுத்து அடைக்கிறார் என்று பலரும் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.
முன்னதாக, வைரமுத்துவை பாரதிராஜாதான் தனது நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மண்வாசனை, முதல் மரியாதை, தாஜ்மஹால், கருத்தம்மா, கிழக்கு சீமையிலே என பல படங்களில் சேர்ந்து பணியாற்றினார்கள். இரண்டு பேரின் கூட்ட்ணியில் வந்த பாடல்கள் அனைத்துமே இன்றுவரை தலைமுறை கடந்து ஒலித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
