விஜய்க்காக விஜயகாந்த் செய்தது.. மறக்காமல் நினைவுகூர்ந்த ஷோபா.. எதையும் அவங்க மறக்கல
சென்னை: விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. முக்கியமாக, அவர் திரைத்துறையில் துணையாக நின்ற விஜய் இப்போது முதலமைச்சராகிவிட்டார். கேப்டன் இதையும் பார்த்து ரசித்திருக்க வேண்டும் என்று அனைவருமே கூறுகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார்.
விஜயகாந்த் 100 படங்களுக்கும் மேல் நடித்து தனக்கென தனி இடத்தை கடைசிவரை வைத்திருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அசால்ட்டாக டஃப் கொடுத்தது மட்டுமின்றி; கிராமங்களில் அவர்களைவிடவும் அதிக ரசிகர்களை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல நடிகர்களுக்கும் அவர் துணையாக இருந்திருக்கிறார்.நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்த பல சிக்கல்களை தீர்த்து வைத்த அவர் அரசியலில் மட்டும் சறுக்கிவிட்டார்.

ஏன் சறுக்கினார்?: அவர் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் தனக்கு இருக்கும் வாக்கு வங்கியை நிரூபித்தார். இதன் காரணமாக அடுத்தடுத்த தேர்தல்களில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் விஜயகாந்த்தை தன்னுடன் சேர்த்துக்கொள்ள முட்டிமோதின. அந்தப் போட்டியில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் ஜெயலலிதாவை கேப்டன் பகைத்துக்கொண்டது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது. அவருடன் இருந்த எம்.எல்.ஏக்கள் அவரிடமிருந்து விலக; கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தார்.
உடல்நல குறைவு: ஒருகட்டத்தில் அவருக்கு உடல்நலமும் சரியில்லாமல் போக; அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பி வீட்டில் ஓய்வாக இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலம் சரியில்லாமல் போக கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை நினைத்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் கண்ணீர் சிந்தியது.
விஜய்க்கு துணை: இதற்கிடையே நடிகராக இருந்து இப்போது முதலமைச்சராக மாறியிருக்கும் விஜய்க்கு துணையாக நின்றவர் விஜயகாந்த். அவர் வளர வேண்டும் என்பதற்காகவும்; தான் அவருடன் நடித்தால் அவருக்கு இன்னமும் வெளிச்சம் கிடைக்கும் என்பதாலும்; செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து விஜய்யின் தாய் ஷோபா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஷோபா பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "செந்தூரபாண்டி திரைப்படத்தில் விஜயகாந்த்தை நடிக்க கேட்க முடிவு செய்துவிட்டு அவர் வீட்டுக்கு எஸ்.ஏ.சி ஃபோன் செய்து, 'உங்களை சந்திக்க வருவதாக கூறினார்'. ஆனால் அவர் அப்படி சொன்ன கொஞ்ச நேரத்தில் விஜயகாந்த்தே வீட்டுக்கு வந்துவிட்டார். என்னை பார்க்க எஸ்.ஏ.சி சார் ஏன் வர வேண்டும். நானே வந்துவிட்டேன் என சொல்லிவிட்டார். இரண்டு பேரும் சேர்ந்து 17 படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். அவற்றில் பத்து படங்களாவது ஹிட்டாகியிருக்கும். விஜய் மீதும் விஜயகாந்த்துக்கு எப்போதும் தனி பாசம் இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
