கான்செர்ட்டிலும் மறக்கப்படாத விஜய்.. யுவன் கச்சேரியில் தளபதியை கொண்டாடி தீர்த்துட்டாங்க
சென்னை: நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருக்கிறார். இதன் காரணமாக அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் திரைத்துறையினரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா; புதுச்சேரியில் இசை கச்சேரி நடத்தினார். அதில் விஜய் கொண்டாடப்பட்டார்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது அவரை ரொம்பவே அசால்ட்டாகத்தான் எடுத்துக்கொண்டார்கள் திமுகவினரும், அதிமுகவினரும். ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் எல்லாம் விஜய் பெயரையோ அவரது கட்சி பெயரையோ ஒருமுறைகூட பரப்புரையின்போது உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரோ அத்தனை அலட்சியங்களையும் பொய் என்று நிரூபித்து; முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

சினிமாவில் நடப்பது மாதிரியே: தமிழ்நாடு என்றாலே கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக திமுக, அதிமுகதான் அதிகார மையங்களாக இருந்தன. அந்த இரண்டு கட்சிகளை மீறி எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைதான் இருந்தது. விஜய் வந்த பிறகு அத்தனையும் மாறிவிட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்; விஜய் செய்தது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கக்கூடியது. அதை ரியல் வாழ்க்கையிலும் செய்து காண்பித்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துவருகிறார்கள்.
சந்தோஷத்தில் திரைத்துறையினர்: திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபராக மாறியிருக்கிறார் விஜய். இதன் காரணமாக கோலிவுட்டை சேர்ந்தவர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவரை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.கூடிய விரைவில் அவருக்கு திரைத்துறை சார்பாக பாராட்டு விழா நடத்தவும் பிளான் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அப்படி அவசரப்பட்டு ஒரு விழாவை நடத்திடக்கூடாது என்றும் சிலர் சொல்வதை கேட்க முடிகிறது.
விமர்சனங்களும் உண்டு: விஜய் முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து அவரது செயல்பாடுகள் சில விமர்சனத்தை சந்தித்தன. அதையெல்லாம் அந்தக் கட்சியினர் சமாளிக்கவே செய்தார்கள்தான். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எல்லாம் தவெகவில் சேர்ந்தார்கள். தூய சக்தி என்று தனது கட்சியை பிரகடனப்படுத்திய விஜய்; ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை ஏன் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கடுமையாக சாடிவருகிறார்கள். இதற்கு எதை சொல்லி சமாளிப்பது என தெரியாமல் இருக்கிறார்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்.
ட்ரெண்டிங் வீடியோ: இப்படி விஜய்யை சுற்றி பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் தினமும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதுச்சேரியில் இசை கச்சேரி நடத்தினார். அதில் பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார்கள். அப்போது கோட் பட பாடலை யுவன் பாட; அருகே இருந்த பிரேம்; 'தளபதி முதலமைச்சரே ஆகிட்டாரு.. என் நெஞ்சி குடியிருக்கும்' என கூற; அங்கே கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் குரல் எழுப்பினார்கள். இந்த வீடியோ இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
