விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. பிறந்தநாள் பரிசு இதோ!
சென்னை: விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த பெரிய திரைப்படமாக 'நூறு சாமி'யை அறிவித்துள்ளது. 'பரிமளா & கோ' திரைப்படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த குடும்பங்களும் பார்த்து வியக்கும் வகையில் மற்றொரு சிறந்த திரைப்படத்தை ZEE5 தமிழ் வழங்கவுள்ளது.
விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள இந்த படத்தில் மெயின் லீடே சுவாசிகா தான். அம்மாவுக்கு மறுமணம் செய்யும் மகனாக விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் திஷன் இயக்குநர் சசி இயக்கத்தில் செம ஸ்கோர் செய்துள்ளார். விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு நூறு சாமி ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

'பரிமளா & கோ' பெற்ற பேராதரவு: இந்த அறிவிப்பு ZEE5 தமிழ் தளத்திற்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான 'பரிமளா & கோ' திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இத்திரைப்படம், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது. குடும்பங்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இப்படம், ZEE5 தளத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்தது. இந்த மாபெரும் வெற்றி, மண்ணின் மணமும் எதார்த்தமான வாழ்வியலும் நிறைந்த நல்விருந்தாக, குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் திரைப்படங்களை வழங்க வேண்டும் என்ற ZEE5 தமிழின் இலக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட 'நூறு சாமி': அந்த வெற்றிகரமான வரிசையில், ZEE5 தமிழ் தற்போது வழங்கும் 'நூறு சாமி', முற்றிலும் மாறுபட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு கதைக் களத்தைக் கொண்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தனது மகனுக்காகவும் குடும்பத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த ஒரு விதவைத் தாயின் கதையை விவரிக்கிறது.
தனது நாற்பது வயதின் நடுப்பகுதியில் இருக்கும் அந்தத் தாய், மறுமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது, உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் ஒரு பெண் எப்போதும் தியாகம் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்தச் சமூகத்தின் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே படத்தின் முக்கியக் கதைக்களமாகும்.
புதுமையான தாய்-மகன் உறவு: இக்கதையின் மையப்புள்ளியாக ஒரு தாய்க்கும் அவரது மகனுக்கும் இடையேயான ஆழமான, மனதை நெகிழச் செய்யும் அன்பு அமைந்துள்ளது. விஜய் ஆண்டனியின் முந்தைய திரைப்படங்களில் பாராட்டப்பட்ட தாய்-மகன் பாசப் பிணைப்பைப் போன்றே, இந்தப் படமும் ஒரு தாயின் உன்னதமான தியாகங்களை வெளிப்படுத்துகிறது. ஆனால், வழக்கமான தியாகக் கதைகளிலிருந்து மாறுபட்டு, தன் தாயின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் மகன், சமூகத்தின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தாயின் மகிழ்ச்சிக்காகத் துணை நிற்பது இப்படத்தை மிகவும் தனித்துவமாக்குகிறது. திரையில் இதுவரை பார்த்திராத ஒரு புதுமையான மற்றும் மனதைத் தொடும் தாய்-மகன் உறவை இத்திரைப்படம் மிக அழகாகச் சித்தரித்துள்ளது.
'நூறு சாமி' ஒரு தனித்தாயின் கதையைச் சொன்னாலும், அது ஒட்டுமொத்தப் பெண்களின் வாழ்வியலையும் பேசுகிறது. திருமணம், தாய்மை, தியாகம், துணைக்கான தேவை மற்றும் பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை ஆகியவற்றை ஆழமாக விவாதிப்பதால், இது அனைத்து தலைமுறை பெண்களும் தங்கள் வாழ்க்கையோடு எளிதில் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.
திரையரங்குகளில் கிடைத்த வெற்றி: முன்னதாக, திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ஆரம்பத்தில் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும், ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் வாய்மொழிப் பாராட்டுகள் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் வெற்றிகரமாக ஓடி நல்ல ஆதரவைப் பெற்றது. படத்தின் எதார்த்தமான கதையும், நடிகர்களின் அற்புதமான நடிப்பும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
ஓடிடி ரிலீஸ்: 'பரிமளா & கோ' திரைப்படம் வழங்கிய கலகலப்பான நகைச்சுவை விருந்திற்குப் பிறகு, தற்போது மனதுக்கு நெருக்கமான, உணர்வுப்பூர்வமான ஒரு நல்ல திரைப்படத்தைக் காணும் நேரம் வந்துவிட்டது. 'நூறு சாமி' திரைப்படம் இந்த ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications

