Anbe Diana Prashanth Review - அன்பே டயானா பிரசாந்த் விமர்சனம்.. புகழ்ந்து தள்ளிட்டாரே ப்பா!
சென்னை: பாரி இளவழகன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கும் படம் அன்பே டயானா. அவருடன் ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இன்று தியேட்டர்களில் வெளியான இந்தப் படத்துக்கு சூப்பர் வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
ஜமா படத்தை இயக்கி, நடித்து கவனம் ஈர்த்த பாரி இளவழகன்; இப்போது அன்பே டயானா திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது படம். முதல் காட்சி முடிவில் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

பிரசாந்த் விமர்சனம்: அந்த வீடியோவில் அவர், " ஜமா படத்தின் மூலம் பாரி இளவழகன் யார் என்று தெரியும். ஓடிடியில் அந்தப் படம் வந்த பிறகு எவ்வளவு பெரிய அங்கீகாரம் அந்தப் படத்துக்கு கிடைத்தது என்றும் தெரியும். அவராகவே முயற்சி எடுத்து சினிமாவுக்குள் வந்தவர் பாரி இளவழகன். அவரே இப்போது அன்பே டயானா படத்தை இயக்கி நடித்திருக்கிறார். ரம்யா ரங்கநாதன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் சின்ன வேடத்தை செய்திருந்தார். இந்தப் படத்தில் சூப்பர் ஃபெர்ஃபார்மென்ஸ்.
ஆடுகளம் மாதிரி: ஒரு மேஜிக்கையே செய்திருக்கிறார். ஆடுகளம் படத்தில் டாப்ஸியை பார்த்து, 'வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா' என பாடினோம். அதேமாதிரி இதில் ரம்யா இருக்கிறார். ஆங்கிலோ - இந்தியனாக கலக்கியிருக்கிறார். ஹீரோயின் கிறிஸ்தவ குடும்பம்; ஹீரோ ஹிந்து ஆனால் தெலுங்கு பேசும் குடும்பம். இரண்டு கலாசாரங்களையும் சூப்பராக எடுத்திருக்கிறார் இயக்குநர்.அன்பை மட்டுமே விதைத்திருக்கிறார்.
பெரம்பூரை சுற்றி: முக்கியமாக பெரம்பூரை அவ்வளவு அழகாக காண்பித்திருக்கிறார். அங்கே இருக்கும் சின்ன சின்ன இடங்களைகூட அவ்வளவு இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இதை லோக்கல் மேட் இன்ட்டர்நேஷனல் படமாக எடுத்திருக்கிறார். இதில் பரிதாபங்கள் கோபி பெரிய சர்ப்ரைஸ். பெங்களூரு தமிழ் பையனாக அட்டகாசம் செய்திருக்கிறார். அந்த மீட்டரில் மிரட்டியிருக்கிறார்.
சேத்தன் என்ன மனிதர்?: அதேபோல் சேத்தனும் பெரிய சர்ப்ரைஸ். அவரெல்லாம் என்ன மனிதர். விடுதலை படத்தில் அவரை பார்க்கும்போது பயமாக இருக்கும். இப்படி ஒரு போலீஸா என தோன்றும். இதில், அட்டகாசம் செய்கிறார். கடைசி 20 நிமிடங்களில் மிரட்டிவிட்டார். அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரிய பரிசு. அவரை இன்னும் யூஸ் செய்ய வேண்டும். ரோஜாவும் மிரட்டிவிட்டார். அவரெல்லாம் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்.
சாதாரண காதல் கதை: இந்தப் படம் சாதாரண லவ் ஸ்டோரிதான். பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் அதை ரொம்ப நியாயமாக செய்திருக்கிறார்கள். நாம் நம் நண்பர்களுக்குள் பேசுவதையே படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் அன்பே டயானா செய்கிறது. இந்தப் படத்தின் அழகே அதுதான். ஆத்மார்த்தமான படம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு இருக்கிறது. நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள். இந்தப் படம் வென்றால் இன்னும் பல இளைஞர்கள் வெல்வார்கள். இந்தப் படம் வெல்வது தமிழ் சினிமாவுக்கு முக்கியம். உங்கள் டிக்கெட் பணம் கண்டிப்பாக வீணாகாது" என்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications

