Jana Nayagan Review: ஜன நாயகன் விமர்சனம்.. பகவந்த் கேசரியை விட பக்காவா? பரவாயில்லையா?
Star Cast: Vijay, Pooja Hegde, Mamitha Baiju
Director: H.Vinoth
சென்னை: நடிகராக விஜய்க்கு இதுதான் கடைசி படம் என்பதால் ஏற்கனவே தளபதியை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். முதலமைச்சர் டைட்டில் கார்டுடன் இது முதல் படம் என்பதால் திரையில் மாண்புமிகு முதலமைச்சர் டைட்டில் கார்டை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே மொத்த படமும் ஹெச்டி தரத்தில் எடிட்டிங் வெர்ஷன் உடன் லீக்கான நிலையில், படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. சுமார் 1.2 கோடி பேர் இந்த படத்தை பார்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதுவாக இருந்தாலும், தம்பி இது தளபதி படம் என்பது போல தற்போது சிஎம் விஜய்யின் ஜன நாயகன் படத்தை பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் லீவு போட்டு படத்தை கொண்டாடி வருகின்றனர். அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, ராம் பால் நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் இருந்து எதையெல்லாம் இயக்குநர் எச். வினோத் ரீமேக் செய்துள்ளார். பகவந்த் கேசரியை விட ஜன நாயகன் பக்காவா? உள்ளதா? இல்லது பார்க்கும் அளவுக்காவது பரவாயில்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஜன நாயகன் கதை: தேர்தல் நாளில் மக்கள் ஒரு விஷயத்துக்காக பயப்பட அவர்களின் பயத்தைப் போக்க சொல்லப்படும் கதையாகவே ஜன நாயகன் தொடங்குகிறது. சிறையில் கைதியாக தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) ஓபனிங்கில் சண்டைக் காட்சியுடன் எம்ஜிஆர் ரெஃபரன்ஸ் உடன் என்ட்ரி தருகிறார். போலீஸ் அதிகாரியான கெளதம் மேனனுக்கு உதவியாக சிறையை தளபதி கட்டுப்படுத்த அவருடன் நட்பாகிறார். மதுரை சிறையில் இருந்து விடுதலையாகும் அவர் சென்னையில் வசிக்கும் கெளதம் மேனன் மற்றும் அவரது மகளை சந்திக்கிறார்.
விஜய்யை சூப்பர் மேன் என அழைக்கும் அந்த சின்னக் குழந்தை அப்பாவுடன் செல்ல மறுக்கிறது. நீங்க வரவரைக்கும் நான் பார்த்துக்குறேன் என தளபதி சொல்ல, புல்லட்டில் செல்லும் கெளதம் மேனனுக்கு விபத்து ஏற்பட அவர் இறந்து போகிறார். ஏற்கனவே அம்மாவை சிலர் கொன்று விடுவதை பார்த்ததில் இருந்தே பயத்துடன் இருக்கும் அந்த சிறுமியை எப்படியாவது தைரியப்படுத்த வேண்டும் என்றும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என வளர்த்து ஆளாக்குகிறார்.

வெளிநாட்டில் சிறையில் இருக்கும் வில்லன் டெடி பியர் பொம்மைகள் மூலம் இந்தியாவுக்குள் 50 லட்சத்துக்கும் மேலான துப்பாக்கிகளை கடத்தி மதக்கலவரத்தை தூண்டி இந்தியாவை ரத்த பூமியாக்க துடிக்கிறான். அவனது முயற்சியை முறியடிக்க துடிக்கும் அதிகாரியாக வரும் நரேன் வில்லன் தொடர்பான ஃபைலை மமிதா பைஜு மூலம் அரசாங்கத்திடம் கொடுக்க வைக்கிறார். அதன் காரணமாக மமிதா பைஜுவை வில்லன் பாபி தியோல் ஆட்களை வைத்து காலி செய்ய நினைக்க ராவணன் மவன் டா பாடலுடன் இடைவேளை சண்டை ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கிறது. இதற்காகத்தான் ஏ சான்றிதழ் கொடுத்திருப்பார்கள் என்றே தெரிகிறது.
வில்லன் யார்? போலீஸ் அதிகாரியாக தளபதி வெற்றிக் கொண்டான் உடன் இருந்த பாபி தியோல் எப்படி சர்வதேச ஆயுதக் கடத்தல் ஆசாமியாக மாறினான். அவனது முயற்சியை தளபதி முறியடித்தாரா? இல்லையா? மமிதா பைஜுவின் பயம் போனதா? இல்லையா? என்பது தான் ஜன நாயகன் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: பகவந்த் கேசரி படத்தின் மூலக் கதையை அப்படியே எடுத்துக் கொண்டாலும் அந்த படத்தில் அர்ஜுன் ராம்பால் சொகுசு மாளிகையில் இருந்துக் கொண்டு மாஸ் காண்பிப்பது போன்ற காட்சிகளை முற்றிலும் தூக்கி விட்டு வில்லன் போர்ஷனுக்கு எந்தளவுக்கு வேல்யூ சேர்க்க முடியுமோ அதை தனது ஸ்டைலில் செய்திருக்கிறார் எச். வினோத்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்ப்பது போல ஆப்பிரிக்கா நாட்டில் நடக்கும் காட்சிகள் எல்லாம் படு மிரட்டலாக உள்ளன. மன நல மருத்துவராக காஜல் அகர்வால் வருவதும் பாலகிருஷ்ணாவுடன் ரொமான்ஸ் செய்வதும் போன்ற காட்சிகளை அகற்றிவிட்டு லோகன் டிவியில் வேலை பார்க்கும் நிரூபராக வரும் பூஜா ஹெக்டே தளபதியுடன் இணைந்துக் கொண்டு வில்லனின் நெட்வொர்க்கை ஆராய்ச்சி செய்யும் காட்சிகள் படத்திற்கு பெரிய பலமாக உள்ளன.
மமிதா பைஜு பயப்படும் காட்சிகளிலும், சித்தப்பா என விஜய்யுடன் ஜாலியாக விளையாடும் காட்சிகளும், கடைசியில் கிளைமேக்ஸில் நடைபெறும் டிரான்ஸ்ஃபர்மேஷன் என அடிதூள் பண்ணியுள்ளார். பாபி தியோல், அரசியல்வாதியாக வந்து பிரகாஷ் ராஜ் போடும் ஆட்டம் எல்லாம் அலப்பறை.
பிளஸ்: பகவந்த் கேசரி படத்தை எந்தளவுக்கு பாலகிருஷ்ணா ஜோனில் இருந்து தளபதி விஜய்யின் ஜோனுக்கு மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு எச். வினோத் மாற்றி அமைத்ததே படத்துக்கு பெரிய பிளஸ் தான். தெலுங்கு ரசிகர்கள் படத்தை பார்த்தாலும் பல காட்சிகள் புதுசாகவே இருக்கும். அதிலும், அந்த ரோபோக்களுடன் நடக்கும் சண்டை அந்த சிலிண்டர்களை வெடிக்க வைத்து பாலய்யா போடும் சண்டையை விட சூப்பராகவே உள்ளது. அனிருத்தின் இசையில் தளபதி கச்சேரி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. கண்ணகி போர்ஷன் கொடுத்த காசுக்கு வொர்த்துதான். செல்ல மகளே பாடல் தாலாட்டுகிறது. இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ் பேக், விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் படத்துக்கு பெரிய பலம்.
மைனஸ்: பாலகிருஷ்ணா திரைப்படம் அதிகமாக குடும்ப ரசிகர்களை கவரும் விதமாக ஏகப்பட்ட காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் ராவான திரைக்கதை என அமைக்கப்பட்ட நிலையில், விஜய் மமிதா பைஜுவை தாண்டி பல இடங்களில் ரொம்பவே சீரியஸான முகத்துடனே தென்படுகிறார். அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். பகவந்த் கேசரி ரீமேக்கை விட புதிய கதையை கடைசி படத்துக்கு விஜய் தேர்வு செய்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஏற்கனவே மதராஸி படத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த கதை வந்த நிலையில், அந்த போர்ஷனும் ரொம்பவே அடிவாங்குகிறது. எது எப்படியோ தளபதி விஜய்யை ஒன் லாஸ்ட் டைம் திரையில் பார்த்து ஆட்டம் போடும் ரசிகர்களுக்கான தரமான திருவிழாவாக இந்த ஜன நாயகன் அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications
