கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகமாக உருவாகியுள்ள தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம், பொன்னியின் செல்வன். 1958ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களான எம் ஜி ஆர், பாரதிராஜா, கமல்ஹாசன், மணிரத்னம் என பலருக்கு கைமாறி இந்த கதை, இறுதியாக 2022 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் (PS1, PS2) படமாக உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் கதையின் பயணங்கள் பற்றிய தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளது.
1958ஆம் ஆண்டு 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் நடிப்பில் இப்படம் உருவாகவுள்ளது என பல தகவல்கள் மற்றும் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியது.
எம்.ஜி.ஆர் தயாரிப்பில் அவரே நாயகனாக நடிக்கவிருந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் நம்பியார், சரோஜா தேவி, ஜெமினி கணேஷன் என 1958ஆம் காலகட்டங்களில் உள்ள முன்னணி நடிகர்கள் பலர் நடிக்க இருந்தனர்.
இப்படத்திற்காக எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் கதையை படமாக இயக்க அந்த காலத்தில் 10,000 தொகைக்கு வாங்கியுள்ளார், ஆனால் இப்படம் படப்பிடிப்பு கூட தொடங்காமல் தள்ளி சென்றது. இருப்பினும் எம்.ஜி.ஆர் இப்படத்தினை உருவாக்க ஆசைகளோடு காத்திருந்தார்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாக வேண்டும் என விருப்பம் கொண்ட எம் ஜி ஆர், 'ஒரு கைதியின் டைரி' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற எம் ஜி ஆர் பொன்னியின் செல்வன் படத்தினை, எம் ஜி ஆர் தயாரிப்பில் பாரதிராஜா இயக்க வேண்டும் என தனது விருப்பத்தினை கூறியுள்ளார்.
எம் ஜி ஆர்-யின் விருப்பத்திற்கேற்ப அந்த காலகட்டத்தில் முன்னணி முக்கிய நடிகர்களாக இருந்த கமல் ஹாசன் - ஸ்ரீதேவி (வந்தியத்தேவன் - குந்தவை) கதாபாத்திரத்தில் நடிக்க பொன்னியின் செல்வன் படம் உருவாக இருந்தது. ஆனால் எம் ஜி ஆர் அவர்களுக்கு ஏற்பட்ட தீடிர் விபத்து காரணமாக இப்படம் உருவாகாமல் மீண்டும் தள்ளிச்சென்றது.
எம் ஜி ஆர், பாரதிராஜாவிற்கு பின் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்' படத்தினை இயக்கி நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார், ஆனால் கமலின் மருதநாயகம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தினை தொடங்க வர்த்தக ரீதியாக பல தடைகள் வந்துள்ளது. இதன் காரணமாக கமல்ஹாசன் இந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.
எம் ஜி ஆர், பாரதிராஜா, கமல்ஹாசனுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தினை படமாக்க ஆர்வம் கொண்டிருந்தது, இயக்குனர் மணிரத்னம். இவர் மூன்று முறை இப்படத்தினை இயக்க முயற்சித்து சில காரணங்களால் பின்வாங்கியுள்ளார்.
1980-ஆம் ஆண்டு காலகட்டங்களில் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான 'நாயகன்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் கமல் முன்னணி நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தினை உருவாக்க இயக்குனர் மணிரத்னம் முயற்சித்துள்ளார், ஆனால் அச்சமயம் இப்படம் உருவாகாமல் போனது.
2000-ஆம் ஆண்டின் காலகட்டங்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தினை இயக்க மீண்டும் முயற்சித்துள்ளார், அன்றைய காலகட்டங்களில் உள்ள முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகவிருந்த இப்படம், பல சிக்கல்களை சந்தித்து மீண்டும் உருவாகாமல் தள்ளி சென்றது.
2010 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தினை இயக்க மூன்றாவது முறையாக முயற்சித்துள்ளார். விஜய், மகேஷ் பாபு நடிக்க, எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுத இப்படம் உருவாகவிருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக மணிரத்னம் - ஜெயமோகன் கோதாவரி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு சென்று திரைக்கதை விவாதித்துள்ளனர். அந்த நேரத்தில் மணிரத்னம் - ஜெயமோகன் பொன்னியின் செல்வன் நாவல் கதையை தவிர எந்த ஒரு கதையை பற்றி பேசியது இல்லை என தகவல்கள் வெளியாகியது. 2010ஆம் ஆண்டு ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், உருவாகவிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம், படப்பிடிப்பு கூட தொடங்காமல் நிறுத்தப்பட்டது.
மூன்று முறையை பொன்னியின் செல்வன் படத்தினை படமாக்க முயற்சித்தும் படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்காமல் இப்படம் கைவிடப்பட்ட நிலையில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் எனது ட்ரீம் ப்ராஜெட் (Dream Project) படம் என பல மேடைகளில் கூறியுள்ளார்.
இறுதியாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக தமிழ் சினிமாவில் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
2019 ஆண்டு படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படம் இரண்டு பாகமாக உருவாக்கப்பட்டு 2022 செப்டம்பர் 30ல் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் - எம் ஜி ஆர் - பாரதிராஜா - கமல் ஹாசன் மற்றும் பல பிரபலங்கள் முயற்சித்து, 2022ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் திரையுலகின் கனவு படமாகவும், தமிழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் படமாகவும் பிரமாண்ட முறையில் உருவாகி வெளியாகவுள்ளது.