twitter

    லட்சுமி பிரியா சந்திரமௌலி பயோடேட்டா

    லட்சுமி பிரியா (லட்சுமி பிரியா சந்திரமெளலி) என்பவர் தமிழ்த் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர் நடிகை ஆவார். இவர் சென்னையில் உள்ள ஸ்கூல் ஆஃப் சொசைட்டி வொர்க் (சமூக சேவை பள்ளி) எனும் கல்லூரியில் மனித வள மேலாண்மைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழகத் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பாக எவாம் எனும் ஆங்கிலத் திரைப்பட நிறுவனத்தில் முழுநேர வேலையில் சேர்ந்தார்.மேலும் இவர் முன்னாள் தேசிய பெண்கள் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். தேசிய அளவில் நடைபெற்ற வட்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

    லட்சுமி பிரியா சந்திரமெளலி தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இவர் சென்னை சமூகவேலைப் பள்ளி எனும் கல்லூரியில் மனித வள மேலாண்மைப்பிரிவில்முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு மனித வள மேலாளராகப் பணிபுரிந்தார். தான் செய்யும் பணிகளை ஆக்கப்பூர்வமான முறையில் செய்ய வேண்டும் என நினைத்தார். எனவே எவாம் ஆங்கிலத் திரைப்பட நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணியில் சேர்ந்தார். ஆனால் அங்கிருந்த வேலைப்பளுவின் காரணமாக அவரால் நடிக்க இயலவில்லை. இங்கு பணிபுரியும் போதுதான் திட்டமிடல் எவ்வாறு செயலாக மாறுகிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன் எனத் தெரிவித்தார். 

    லடசுமி தனது சிறுவயதில் இருந்தே தடகள விளையாட்டு மெய்வல்லுநராக இருந்து வருகிறார். இவருக்கு பத்து வயது ஆவதற்கு முன்பிலிருந்தே சீருடற்பயிற்சிகள் கற்று வருகிறார். பின் துடுப்பாட்டம் விளையாடத் துவங்கினார். இந்திய தேசியப் பெண்கள் துடுப்பாட்ட அணியில் (பி அணி) இடம்பிடித்து மேற்கிந்தியத்தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார். அல்டிமேட் சென்னை ஃபிரிஸ்பீ யில் உறுப்பினராக உள்ளார். இதில் நடைபெறக்கூடிய போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

    எவாம் நிறுவனத்தின் நடைபெறவிருந்த நாடகத்தின் நுழைவிசைவு விற்பனையின் போது இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய முன்தினம் பார்த்தேனே திரைப்படத்தில் ஓர் துணைக்கதாப்பாத்திரத்தில் நடிக்க இவரை அனுகினார். இவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து விடுப்பு எடுத்து பத்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் ஒரு தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்தார். அதன்பிறகு தர்மயுத்தம் தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடிப்பதற்கான நேர்கானலில் கலந்து கொண்டார். பின்பு முழுநேரமாக தொலைக்காட்சியில் நடிப்பது என முடிவு செய்து வேலையில் இருந்து விலகினார். பல வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைத் தேடினார். பின் சாரதா எனும் கதாப்பாத்திரத்திற்குத் தேர்வானார்.

    சுட்ட கதை எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சிலந்தி எனும் தைரியமான கிராமப் பெண் வேடத்தில் நடித்தார். மேலும் இதில் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். 

    இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படம் அறிமுக இயக்குநர் வடிவேல் இயக்கிய கள்ளப்படம் ஆகும். இதில் தன்னுடைய கதாப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் , உணர்ச்சிப்பூர்வமானதாகவும் அதேசமயம் வலிமையான பெண் கதாப்பாத்திரமாகவும் உள்ளதாகத் தெரிவித்தார். சிபி வலைத்தளம் , லட்சுமிப்பிரியா இந்தக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் எனத் தெரிவித்தது. மேலும் இவர் நயன்தாரா மற்றும் ஆரி (நடிகர்) நடித்த மாயா திரைப்படத்திலும் நடித்துள்ளார். 

    2017 ஆம் ஆண்டுகளில் பல தமிழ் குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக லட்சுமி குறும்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தக் குறும்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.