நாஞ்சில் சம்பத் தமிழ் நாட்டு அரசியல்வாதி. இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் மளிகைக் கடை வைத்திருந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் - கோமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் 2016 ஜனவரி 2ஆம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை புனித மரியா கொரற்றி மேல்நிலை பள்ளியில் படித்தார். தனது பட்டப்படிப்பை நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் படித்தார்.
சிறு வயதிலேயே பேச்சில் சிறந்த விளங்கிய இவர் திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர் வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறினார். தமிழக இலக்கிய அரங்கில் முக்கிய பேச்சாளராகவும் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார். அதிமுக, திமுக போன்ற ஆட்சிகளில் போடப்பட்ட வழக்குகளில் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த மார்ச் 1, 2009 அன்று திருப்பூரில் ‘நாதியற்றவனா தமிழன்?’ என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.
டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சம்பத், தினகரன் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைத் தொடங்கிய போது, அந்த அமைப்பின் பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா என்னும் பெயர்கள் இல்லாததால், அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.
அதன் பிறகே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தற்போது நடித்து கொண்டிருக்கிறார்.