twitter

    வினு சக்ரவர்த்தி பயோடேட்டா

    வினு சக்ரவர்த்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தார். இவர் தமிழ் நடிகரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, படகா போன்ற 4 மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, கெட்ட குணமுடைய (எதிர்நாயகன்) வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழிலேயே மிகப்பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.

    இவர் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மேல்புதூரில் ஆதிமூல தேவருக்கும் மஞ்சுவாணி அம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு பிரேமகாந்தன் என்ற இளைய சகோதரரும், குண்டலகேசி என்ற இளைய சகோதரியும் உள்ளனர். இவரின் மனைவி கர்ண பூ ஆவார். இவரின் மகள் சண்முக பிரியா பேராசிரியையாக அமெரிக்காவில் உள்ளார். மகன் சரவண பிரியன் இலண்டனில் மருத்துவராக உள்ளார். இவர் இராயப்பேட்டை வெஸ்லே பள்ளியிலும் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டார். வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி நடித்து, இயக்கி உள்ளார்.

    இவர் இருப்பு துணை ஆய்வாளராக 6 மாதம் ஐஸ் அவுஸ் பகுதியில் பணியாற்றிவிட்டு தென்னக இருப்புப்பாதையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதையாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய பரசக்கே கண்ட தின்மா என்ற படம் வெற்றிபெற்றதையடுத்து அதை திருப்பூர் மணி தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டார். அதன் பொருட்டு இவர் தமிழ் திரையுலகுக்கு வந்தார். பரசக்கே கண்ட தின்மா என்ற படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று தமிழில் சிவகுமாரை கொண்டு எடுக்கப்பட்டது.

    இவர் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சிலுக்கு என்ற பாத்திரத்தில் ஸ்மிதாவை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.