எனை நோக்கி பாயும் தோட்டா இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயகத்தில் நடிகர் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்க, இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் இஸ்மாயில் செண்டு எடிட்டிங் பணியாற்றியுள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் உலகம் முழுவதும் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் கதை
பொள்ளாச்சியில் தன் அண்ணன் தங்கையுடன் வசித்து வருகிறார் தனுஷ் (ரகு), ஒரு கட்டத்தில் அண்ணன் சசிகுமார் (திரு) காதல் திருமணம் காரணமாக வீட்டை விட்டு ஓடிச் செல்கிறார். அவரை தேடியும் கிடைக்காததால் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார் தனுஷ்.
தனுஷின் கல்லூரியில் நடக்கும் ஒரு படப்பிடிப்பில் நடிக்க வருகிறார் மேகா ஆகாஷ் (லேகா). அச்சமயம் தனுஷ் நடிகை மேகா ஆகாஷுடன் அறிமுகமாகிறார். இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இவரின் காதல் அந்த படப்பிடிப்பின் தயாரிப்பாளருக்கு தெரியவர இதனை தடுக்கிறார். பின்னர் தனது தயாரிப்பில் மெகா ஆகாஷ் மீண்டும் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறி மேகா ஆகாஷை தன்னுடன் அழைத்து செல்கிறார். மேகா ஆகாஷ் திரும்ப வருவாள் என நான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார் தனுஷ்.
நான்கு ஆண்டுகள் கழித்து மேகா ஆகாஷ் தனுஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் மும்பையில் சிக்கி உள்ளதாகவும், இங்கு உன் அண்ணனை நான் சந்தித்ததாகவும் கூறிகிறார். இதனை அறிந்த தனுஷ் தன் அண்ணன் மற்றும் காதலியை தேடி மும்பை செல்கிறார். அங்கு கல்லூரியில் தன்னுடன் பயின்ற சுனேனாவின் இல்லத்தில் தங்கி தன் அண்ணன் மற்றும் காதலியை தேடுகிறார்.
பின் சசிகுமார் கொல்லப்படுகிறார். இதற்கான காரணத்தையும், நாயகி மேகா ஆகாஷ் ஏன் திரும்ப வரவில்லை என்பதனை கண்டறிகிறார் தனுஷ். அடுத்து நடக்கவிருக்கும் சுவாரஸ்யமே படத்தின் மீதிக்கதை.
எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் ரிலீஸ் பிரச்சனைகள்
சமீபத்தில் தமிழில் வெளியாகவிருந்த திரைப்படங்கள் தயாரிப்பாளர் பிரச்சனைகள் காரணமாக திரைப்படங்களை வெளியிடுவதற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அப்படி இரண்டு வருடங்களாக வெளியிடாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.
இத்திரைப்படத்தினை ஒரு வழியாக தயாரிப்பாளர்களை மாற்றி 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வெளியிட முயற்சிகள் எடுத்து வருகின்றன. இப்படத்தின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் மதன் தயாரித்துள்ளார், பின்னர் இப்படத்தினை இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் முழு காப்புரிமையும் பெற்று தயாரித்து வந்துள்ளார். இத்திரைப்படத்தினை விநியோகம் செய்வதற்கு முன்வந்த கே புரொடக்ஷன் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து இப்படத்தினை மே மாதம் வெளியிட உறுதிசெய்தது. பின்னர் மே மாதம் வெளியாகவிருந்த இத்திரைப்படத்திற்கு தீடிரென ஒரு பிரச்சனை கிளம்பியது.
தென்னிந்தியாவில் 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "பாகுபலி 2". தெலுங்கு திரைப்படமான இத்திரைப்படத்தினை தமிழில் விநியோகம் செய்துள்ள கே புரொடக்ஷன் நிறுவனம், தற்போது 2019-ல் சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்நிறுவனம் பாகுபலி தயாரிப்பாளருக்கு தரவேண்டிய 17 கோடி ரூபாயை இன்னும் நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதனால் தங்களுக்கு தரவேண்டிய 17 கோடியை செலுத்திய பின்னரே கே புரொடக்ஷன் நிறுவனத்தின் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என பாகுபலி 2 தயாரிப்பு நிறுவனம் ஐதரபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனால் கே புரொடக்ஷன் நிறுவனத்தின் சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை வெளியிட ஐதரபாத் உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆகையால் மே மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தினை வெளியிட பிரச்சனைகள் தொடங்கியுள்ளது. இப்படத்தின் பிரச்சனைகளின் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு வருவதாகவும், விரைவில் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து இப்படத்தினை 2019 ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பணிகள் தொடர்ந்து வருகிறது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிக்கையை வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து இந்நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக சிந்துபாத் திரைப்படம் ஜூன் மாதம் வெளியானது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தையும் ஜூலை மாதம் வெளியிட இப்படத்தின் தயாரிப்பாளராகள் முடிவெடுத்தனர். ஆனால் சிந்துபாத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் இந்நிறுவனத்திற்கு நெருக்கடி அதிகமானது. பின்னர் என்னை நோக்கி பாயும் திரைப்படம் ஜூலை மாதமும் வெளியாகவில்லை.
பாகுபலி தயாரிப்பு குழு எனை நோக்கி பாயும் திரைப்படத்தின் தயாரிப்பாளரை சற்று பணஅழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இப்படத்தினை ஐசரி கே கணேஷ்-ன் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிருவத்திடம் ஒப்படைத்துள்ளது கே ப்ரோடுக்ஷன் நிறுவனம். தற்போது இத்திரைப்படத்தினை 2019 நவம்பர் 29ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.