கணேஷா மீண்டும் சந்திப்போம் இயக்குனர் ரத்தீஷ் இரெட் இயக்கத்தில் ஓவியா, ப்ரித்வி ராஜன், சிங்கம் புலி நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அருண் விக்ரமன் கிருஷ்ணன் தயாரிக்க, இசையமைப்பாளர் என்.எல்.ஜி. சிபி இசையமைத்துள்ளார்.
கதை
ஒரு புல்லட் பைக்கால் ஏற்படும் பிரச்சினை, நாயகனை எந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை காமெடியாக சொல்கிறது கணேசா மீண்டும் சந்திப்போம் திரைப்படம். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் பிரித்வி. அவர் தேடி வந்த காக்கா குமார் எனும் ரவுடி கைதாகி சிறைக்கு சென்றுவிடுகிறார். செய்வதறியாது தவிக்கும் பிரத்விக்கு, ஆட்டோ டிரைவர் கிரேன் மனோகரின் நட்பு கிடைக்கிறது. அவர் மூலம் தீப்பெட்டி கணேசனின் ரூமில் இணைகிறார்.
யாருக்கும் தெரியாமல் திருட்டு வேலைகள் செய்து பணம் சேர்க்கிறார் பிரித்வி. அவரை அவ்வப்போது போனில் தொடர்பு கொள்ளும் சிங்கம்புலி, விரைவாக பணத்தை ரெடி செய்து கொண்டு வரும்படி கூறுகிறார். இதற்கிடையே, பிரித்வியை வலை வீசி தேடுகிறார் வில்லன் கட்டாரி.
சென்னையில் திருட்டு வேலைகள் செய்யும் பிரித்விக்கு ஓவியாவின் நட்பு கிடைக்கிறது. அவரையும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்.
ஒருகட்டத்தில் தீப்பெட்டி கணேசன் தனது தங்கை திருமணத்திற்காக கடன் வாங்கி வைத்திருக்கம் ரூ.2 லட்சம் பணத்தை அபேஸ் செய்து கொண்டு புறப்படுகிறார் பிரித்வி. அவர் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார் என்ற பிளாஷ் பேக்குடன் தொடர்கிறது இரண்டாம் பாதி.