மாயநதி இயக்குனர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனர் அசோக் தியாகராஜன் தனது ராஜி நிலா முகில் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ராஜா பவதரிணி இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நாயகனாக அட்டகத்தி, குட்டி புலி திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் அபி சரவணன் மற்றும் அறிமுக நடிகை வெண்பா முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவள் சந்திக்கும் வெவ்வேறு தரப்பான சம்பவங்களை பற்றி இப்படம் எடுத்துரைக்கிறது.
மாயநதி படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணி செய்துள்ளார்.
மாயநதி படத்தின் கதை
அம்மா இல்லாததால் தனது மகளுக்கு அதிக பாசத்தை அளித்து வளர்க்கிறார் தந்தை ஆடுகளம் நரேன். தனது மகளும் தந்தை சொல் கேட்டு வளர்ந்து 10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று பிரபலமாகிறார். பின்னர் 12ஆம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெறுவதற்கு படிக்கும் மாணவி வெண்பா. தனது பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் (அபி சரவணன்) என்பவருடன் அறிமுகமாகி காதலிக்க தொடங்குகிறார்.
ஒருபுறம் காதல், மறுபுறம் படிப்பு என எதனை கையாள்வது என அறியாமல் இருக்கும் வெண்பா, இவரை ஒரு தலையாக காதலித்து வரும் ஒரு இளைஞர் வெண்பாவின் மேல் அசிட் வீசுகிறார், அதில் எதிர்பாராமல் வெண்பாவின் தோழி பாதிக்கப்படுகிறார். பின்னர் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.