மகான் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ விக்ரம், வாணி போஜன், சிம்ரன் என தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படம் நேரடியாக 2022 பிப் 10ல் இணையதள ஆன்லைன் ஓடிடி செயலியான 'அமேசான் பிரைம் வீடியோ' செயலியில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்னன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார்.
மகான் படத்தின் கதை
கதைக்கரு
காந்தியை போல ஒரு மகானாக வாழவேண்டும் என்னும் கொள்கையை கொண்டுள்ள விக்ரம், மிகவும் கட்டுப்பாடோடு வாழ்ந்து வருகிறார். இவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நாள் சம்பவம் இவரை வழி தவறி செல்ல தூண்டுகிறது. பின் இதனால் நடக்கும் நன்மை தீமைகளே படத்தின் கதை.
கதை
தொடக்க காட்சியில் வயதான கெட்அப்பில், முதுகில் ரத்த காயத்துடன் மிக சாதாரணமாக வேஷ்டி சட்டையில் காரில் வந்து இறங்கி கத்தும் விக்ரம், தான் வந்த காரை தானே எரிக்கிறார். பிறகு நடப்பது எல்லாமே ஃபிளாஷ் பேக் தான்.
சிறு வயதில் சாராய வியாபாரியின் மகனுடன் சேர்ந்து சூதாடியதற்காக அப்பாவிடம் அடி வாங்கும் பிள்ளையாக விக்ரம். அவருக்கு எதற்காக காந்தி மகான் என பெயர் வைத்தேன் என அவரது அப்பா விளக்குவதற்கு அப்படி ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்.
மகானாக வாழ்வேன் என சிறுவயதில் அப்பாவிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக காந்திய கொள்கைகளை பின்பற்றி வாழும் பள்ளி ஆசிரியர் காந்தி மகான். அவரது மனைவியாக, அரசு அதிகாரியாக சிம்ரன்.
பிறந்தநாளன்று கோயிலில் பிள்ளைக்காரர் ஒருவர் சொல்வதை கேட்டு, ஒரு நாளாவது தனக்கு பிடித்தது போல் வாழ ஆசைப்பட்டு, கெட்அப்பை மாற்றி, மது, புகை, சூதாட்டம் என அனைத்தையும் சந்திக்கிறார். எதிர்பாராமல் பாரில் தனது பழைய மாணவனை சந்திக்கிறார். அவன் மூலம் அவரது அப்பாவான சாராய வியாபாரி பழக்கம் கிடைக்கிறது.
ஒரு நாள் மது குடித்ததற்காக விக்ரமை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்கிறார் மனைவி சிம்ரன். மீண்டும் சாராய வியாபாரி பாபிசிம்ஹாவுடன் நட்பு தொடர்கிறது. இருவரும் சேர்ந்து சாராய வியாபாரத்தில் தனி சாம்ராஜ்யம் அமைத்து, நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்.
இப்படி வழக்கமான சாராய வியாபாரியின் கதையாகவே முதல் பகுதி செல்கிறது. இரண்டாம் பகுதியில் ஒரு போலீஸ் அதிகாரியாக வரும் துருவ், விக்ரமுடன் இருப்பவர்களை ஒவ்வொருவராக என்கவுன்டரில் கொல்கிறார். அதற்கு பிறகு நடக்கும் அப்பா - மகன் இடையேயான மோதல், பாச போராட்டம், கடைசில் அப்பா-மகன் சேர்கிறார்களா என்பது தான் படத்தின் மீதி கதை.