Anbe Diana Day 4 Box Office - பாரி இளவழகனின் அன்பே டயானா 4வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
சென்னை: பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அன்பே டயானா. இதில் அவருடன் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி ரிலீஸான படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
ஜமா படத்தை இயக்கி கோலிவுட்டில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் பாரி இளவழகன். அதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை அந்தப் படத்தில் பாரி பதிவு செய்திருந்தார். படம் தியேட்டர்களில் ரிலீஸானபோது பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. அதேசமயம் ஓடிடியில் வந்த பிறகு அனைவருமே படத்தை ஆஹா ஓஹோவென்று கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பே டயானா: இப்போது அவர் அன்பே டயானா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பாரி ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். முதல் படம் மாதிரியே இந்தப் படத்தையும் தரமானதாக கொடுப்பார் என்று பாரி மீது ரசிகர்களும், திரைத்துறையினரும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருந்தார்கள். கடந்த 17ஆம் தேதி அந்த ஹைப்போடு படமானது ரிலீஸானது.
எப்படி இருக்கு படம்?: இந்தப் படம் சிம்ப்பிளான கதையை கொண்டதுதான். பெரம்பூரை சேர்ந்த தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்த பையன் ஒருவன்; ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிப்பதும்; அதை சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கேட்பதற்கு சிம்ப்பிள் லைனாக இருந்தாலும்; அதை முடிந்த அளவுக்கு எதார்த்தம் குறையாமல்; ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநரும், ஹீரோவுமான பாரி.
சூப்பர் அப்ளாஸ்: ஜமா படத்தில் திருவண்ணாமலை நிலவியலை பதிவு செய்தார். இதில் பெரம்பூரை காட்சிப்படுத்தியிருக்கிறார். அங்கு இருக்கும் சின்ன சின்ன கடைகள், ஏரியாக்கள் முதற்கொண்டு அத்தனையையும் இயல்பு பிசகாமல் திரைக்குள் கொண்டு வந்த பாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள். சாதாரண காதல் கதையை இரண்டு கலாசாரங்களுக்கிடையே கனெக்ட் செய்து; நல்லதொரு ஃபீல் குட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக படம் பெரும்பாலான ரசிகர்களிடம் பாசிட்டிவ்வான ரிசல்ட்டையே பெற்றது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அந்த இணையதளம் கூறியிருக்கும் தகவல்படி; படம் ரிலீஸாகி நான்காவது நாளான நேற்று 43 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருக்கிறதாம். அதற்கு முந்தைய நாள் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்வரை வசூலித்திருந்தது. அன்றைய நாள் விடுமுறை என்பதால் அந்த வசூல் வந்திருக்கும் என கருதப்படுகிறது.
படம் பற்றி பாசிட்டிவ் பேச்சுக்கள் அதிகம் இருந்ததால் இனி வரும் நாட்களில் வசூல் கண்டிப்பாக அதிகரிக்கும் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்னும் பலருக்கு படம் கனெக்ட் ஆகவில்லை என்பதால் வசூலில் அது எதிரொலிக்கிறது. நான்கு நாட்களில் மொத்தம் அந்தப் படம் இந்தியாவில் மட்டும் இரண்டு கோடியே 43 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாகவும் அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications

