அரண்மனை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்ஷிகா, ராய் லட்சுமி நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக் தயாரிக்க, இசையமைப்பாளர் பாரதிவாஜ் மற்றும் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
கதை
ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.
அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் லட்சுமி ராய் ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.
இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர் சி. அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.
இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக ஆண்ட்ரியாவின் உடலில் புகுந்திருக்கிறது? பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை நகைச்சுவை கலந்த திகிலுடன் சொல்லியுள்ளார் இயக்குநர்.