இவன் யார் என்று தெரிகிறதா இயக்குனர் சுரேஷ் குமார் எஸ் டி இயக்கத்தில் விஷ்ணு, வர்ஷா நடித்துள்ள நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரகுநந்தன் என் ஆர் இசையமைத்துள்ளார்.
கதை
நாயகன் விஷ்ணு கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நண்பர்கள் அர்ஜுனன், ராஜ்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பாவான ஜெயப்பிரகாஷும் விஷ்ணுவை ரொம்பவும் செல்லமாக வளர்த்து வருகிறார். பொறுப்பில்லாமலும், அப்பாவித்தனமாகவும் இருக்கும் விஷ்ணுவை அவரது நண்பர்கள் தங்கள் காதலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக தனது அப்பாவித்தனத்தால் விஷ்ணு தனது நண்பர்களை அவ்வப்போது பிரச்சினையில் மாட்டி விடுகிறார்.
இதனால் கோபமடைந்த அவரது நண்பர்கள் விஷ்ணுவுக்கு காதலே அமையாது என்று அவருக்கு சாபம் விடுகிறார்கள். ஆனால், விஷ்ணுவோ காதலர் தினத்தில் பிறந்த எனக்கு காதல் அமையாதா? நான் யாரையாவது காதலித்து காட்டுகிறேன் என்று அவர்களுக்கு சவால் விட்டு செல்கிறார். அப்போது, கல்லூரியில் படிக்கும்போது இவருடன் படித்த இஷா நாயர், இவரை தேடி வந்து காதலை சொன்னது ஞாபகம் வரவே, அவளை தேடிப் போய் தனது காதலை சொல்கிறார். ஆனால், இஷா நாயருக்கோ திருமணம் ஆகி, குழந்தையெல்லாம் இருக்கிறது. உடனே ஏமாற்றத்துடன் திரும்பும் விஷ்ணு சப்-இன்ஸ்பெக்டரான நாயகி வர்ஷாவை பார்க்கிறார்.
அவளை எப்படியாவது காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இறுதியில், வர்ஷாவை காதலிக்க வைத்து, தனது நண்பர்களுக்கு விடுத்த சவாலை விஷ்ணு நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.