காளி இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் அறிவியல் ரீதியான திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
கதை :
அமெரிக்காவில் வசதியாக வாழும் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பரத் (விஜய் ஆண்டனி). அவருக்கு தினமும் ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பாம்பை பார்த்து மாடு மிரண்டுபோய் அங்கு விளையயாடிக் கொண்டிருக்கும் சின்ன பையனை நோக்கி ஓடி வருகிறது. இதைப்பார்க்கும் சிறுவனின் தாய், பதறிப்போய் ஓடி வருகிறார். இந்த கனவுக்கும், தனக்கும் என்ன தொடர்பு என விஜய் ஆண்டனி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவரது தாய்க்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. அப்போது தான் தெரிய வருகிறது தான் ஒரு தத்துப்பிள்ளை என்று. இதையடுத்து, தனது பூர்விகத்தை அறிந்து கொள்வதற்காக, தாய், தந்தையைத் தேடி இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி. தமது தாய் பற்றிய விவரம் மிக எளிதாக அவருக்கு கிடைத்து விடுகிறது. அந்த விவரத்துடன் தாயை தேடிச் செல்கிறார். ஆனால் அவரது தாய் கனவில் வரும் சம்பவத்தின் போது மாடு முட்டி இறந்துவிட்டது தெரிய வருகிறது. இதையடுத்து தமது தந்தை பற்றி அறிந்து கொள்வதற்காக, தாயின் சொந்த ஊரான கனவுக்கரைக்கு விரைகிறார். கிராம மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ள மருத்துவராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டே தந்தையையும் கண்டுபிடிக்க முயல்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார், அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.