மாயோன் இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே எஸ் ரவிக்குமார் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் புதையலை தேடும் மிகவும் சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. அருண் மொழி மாணிக்கம் தான் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
மாயோன் படத்தினை பார்வை இல்லாத மாற்று திறனாளிகளும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, 2022 ஜூன் 24ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளது.
மாயோன் படத்தின் கதை
கதைக்கரு
தொல்லியல் துறையில் உள்ள நாயகன் அறிவியல் அறிவை கொண்டு 5000 ஆண்டு பழமையான கோயிலில் புதையல் இருப்பதாக சொல்லி அங்கு கடைபிடிக்கும் சாஸ்திரங்களை பரிசோதிக்கிறார். இதனால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் தான் இப்படத்தின் கதைக்கரு.
கதை
தொல்லியல் துறையில் தலைமை அதிகாரியாக உள்ள கே எஸ் ரவிக்குமார் மற்றும் அவரது குழுவில் ஆராய்ச்சியாளர்களாக சிபிராஜ், ஹரீஷ் பேரடி, தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளனர். இவர்கள் மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள 5000 ஆண்டு பழங்கால கிருஷ்ணர் கோயிலை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த கோயிலில் உள்ள ஒரு ரகசிய அறையில் புதையல் இருப்பதாக அறிகின்றனர், தொல்லியல் குழு. பின் சிபிராஜ் மற்றும் ஹரீஷ் பேரடி இணைந்து அந்த புதையலை வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிடுகிறார்கள். கோயிலில் அந்த புதையல் எங்கு உள்ளது என கண்டறிய தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உதவுகின்றனர்.
ஆனால் அந்த கோயிலில் பல மர்மமான விஷயங்கள் நடக்கிறது. இரவு நேரத்தில் அந்த கோயிலுக்குள் சென்றால் மன ரீதியாக பாதிக்கப் பட்டு சித்த பிரம்மம் பிடிப்பதாகவும் ஒரு கருத்து பரவலாக பொது மக்கள் இடையே உள்ளது.
இறுதியில் தொல்லியல் குழு திட்டமிட்டபடி அந்த புதையலை கைப்பற்றியதா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. இறுதியில் ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு இல்லை என்ற கருத்தில் இப்படத்தினை முடித்துள்ளனர்.