சத்யா இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த்ராஜ், யோகி பாபு, மெரினா சதிஷ், ரவி வர்மா மற்றும் பலர் நடித்த அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் க்ஷணம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் சிபிராஜ். அவருடன் யோகிபாபுவும் வேலை பார்க்கிறார். அதே நேரத்தில் சென்னையில், முகமூடிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கோமாவுக்குப் போகிறார் ரம்யா நம்பீசன். திடீரென சிபிராஜுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தது முன்னாள் காதலியான ரம்யா நம்பீசன். பார்க்கவேண்டும் என அவர் கூறவே, யோசிக்காமல் ஃப்ளைட் பிடிக்கிறார் சிபி. சென்னைக்கு வந்தால், 'என் குழந்தையை யாரோ கடத்திட்டாங்க... நீதான் கண்டுபிடிச்சுத் தரணும். ஹெல்ப் பண்ணுவியா' எனக் கேட்டு கலவரப்படுத்துகிறார். அப்பாவுக்கு கேன்சர் வந்ததால் வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலி ரம்யாவுக்காக குழந்தையைக் கண்டுபிடித்துத் தர தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் சிபி.
தேடுதலின் முதல் நிலையிலேயே திடுக்கிடும் திருப்பங்களைச் சந்திக்கிறார். ரம்யாவுக்கு குழந்தையே இல்லை என, கேட்பவர்கள் அனைவருமே சொல்கிறார்கள். இதில் ஏதோ சதி இருக்கிறது என எண்ணி, நாளிதழில் குழந்தையின் புகைப்படத்தோடு காணவில்லை அறிவிப்பு தருகிறார். ஆனால், இந்தக் குழந்தை தன்னுடையது என ஒருவர் ஆல்பம் முதல் பர்த் சர்டிஃபிகேட் வரையும் ஆதாரமாகக் காட்டுகிறார். தலையைப் பிய்த்துக்கொள்ளும் சிபி, உண்மையிலேயே குழந்தை இருந்ததா, அல்லது ரம்யா கோமாவில் இருந்து மீண்டதால் உளறுகிறாரா எனப் புரியாமல் கலங்குகிறார். சிபிராஜே நம்ப மறுத்ததால், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார் ரம்யா நம்பீசன்.