தடம் (2019)(U/A)
தடம் கதை
தடம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய், யோகி பாபு, வித்யா நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக்கி எடுக்கப்பட்டுள்ள போலீஸ் க்ரைம் திரைப்படம்.
கதைச்சுருக்கம்
ஒரு கொலை வழக்கு, அதில் சம்மந்தப்படும் ஓரே உருவம் கொண்ட இரட்டையர், அவர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிக்க முடியாமல் அலையும் போலீசின் திண்டாட்டம் தான் 'தடம்'.
கதை
சிவில் இன்ஜினியரான எழிலுக்கு (அருண் விஜய்), தீபிகா (தன்யா ஹோப்) மீது காதல். தீபிகாவும் எழிலின் காதலை ஏற்றுக்கொள்கிறார். கட்டிட தொழிலில் கோடி கோடியா சம்பாத்தித்து, தன்னுடைய தொழில், வியாபாரத்தை பெருக்கி காதலி தீபிகா உடன் இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவனது கனவு.
இதற்கிடையே, சுருளிவுடன் (யோகி பாபு) கூட்டணி அமைத்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் கவின் (மற்றொரு அருண் விஜய்). பெண்களை சல்லாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் கவின், வழக்கறிஞர்களுக்கே தெரியாத சட்ட நுணுக்கங்களை அறிந்தவர். சுயநலம் பிடித்த கவினுக்கு, ஆனந்தியின் (ஸ்மிருதி வெங்கட்) உண்மையான காதலை ஏற்றுக்கொள்ள மனமில்லை.
இருவரும் வெவ்வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது, இருவரில் ஒருவர், அஜய் என்பவரை கொலை செய்துவிடுகிறார். ஆனால் போலீசாருக்கு ஒரு தோற்றத்தில் இருவர் இருக்கின்றனர் என்ற விவரம் தெரியாது. சம்மந்தப்பட்ட கவின் மற்றும் எழில் இருவருக்குமே தெரியாது.
இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் (ஃபெப்ஸி விஜயன்), இறந்தவரின் மொபைல் போனில் இருக்கும் புகைப்படத்தை வைத்து எழிலை பிடித்து விசாரிக்கத் தொடங்குகிறார். முன்னர், எழில் மீது தனக்கு இருக்கும் தனிப்பட்ட வஞ்சத்தை தீர்க்கவும், இந்த வழக்கை அவர் முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்கிறார்.
இந்த வழக்கை கையில் எடுக்கும் உதவி ஆய்வாளர் வித்யா பிரதீப், எழிலைக் கைது செய்கிறார். அப்போது எதேச்சையாக டிரங் அண்ட் டிரைவ் வழக்கில் சிக்குகிறார் கவின். இதனால் போலீசாருக்கு யார் கொலையாளி என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. இருவரில் யார் உண்மையான கொலையாளி? அவரை போலீசார் எப்படி கண்டுப்பிடிக்கிறார்கள் என்பது தான் விறுவிறுப்பான மீதிப்படம்.