டிக் டிக் டிக் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.
கதை :
படத்தின் முதல் காட்சியில் வானில் இருந்து ஒரு பெரிய விண்கல், சென்னை எண்ணுர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வந்து விழுகிறது. 14க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழக்கின்றனர். இதையடுத்து, கேரள மாநிலம் மூணாரில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மையத்தில், உயர் அதிகாரிகளின் கூட்டம் நடக்கிறது. இந்த மையத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ், உயரதிகாரிகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா, விண்சென்ட் அசோகன் ஆகியோர் எண்ணுர் சம்பவத்தை பற்றி விவாதிக்கிறார்கள்.
இன்னும் ஏழு நாட்களில் பூமியை நோக்கி 200 டன் எடைக்கொண்ட மற்றொரு விண்கல் வந்துக்கொண்டிருப்பதாகவும், சென்னையின் பரப்பரளவுக்கு உள்ள அந்த கல் வங்கக்கடலில் விழுந்தால், ஆயிரம் அடிக்கும் அதிகமாக சுனாமி ஏற்படும் என்ற அபாய செய்தி தெரிவிக்கப்படுகிறது. அந்த விண்கல்லை தகர்த்து அழிக்க, விண்வெளி மையத்தில் மற்றொரு நாடு பாதுகாப்பாக வைத்துள்ள 200 கிலோ எடைக்கொண்ட அணுஆயுத ஏவுகனையை திருட வேண்டும் என ராணுவக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
இதை செய்து முடிப்பதற்காக, மேஜிக் மேனாக இருந்து திருடனாக மாறிய ஜெயம் ரவியின் உதவியை நாடுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயம் ரவி, அவரது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை பயன்படுத்தி, இந்த வேலையில் ஈடுபட சம்மதிக்க வைக்கிறது ராணுவ அதிகாரிகள் குழு.
தனது சகாக்கள் ரமேஷ் திலக் மற்றும் அர்ஜூனுடன் இணைந்து, விண்வெளிக்கு புறப்பட தயாராகிறார் ஜெயம் ரவி. ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில், ஜெயம் ரவிக்கு மிரட்டல் ஒன்று வருகிறது. மகனை பிணையக் கைதியாக பிடித்து வைத்திருக்கும் வில்லன், அணுஆயுத ஏவுகணையை கேட்கிறது.
மகனா... மக்களா... ஜெயம் ரவி என்ன முடிவெடுக்கிறார்? அந்த மர்ம வில்லன் யார்? விண்கல் தகர்க்கப்பட்டதா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.