வேட்டையன் - இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியர், பகத் பாஸில், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், துஷரா விஜயன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2024 அக்டோபர் 10ல் விஜயதசமி சிறப்பு திரைப்படமாக வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக மெங்கும் விநியோகம் செய்துள்ளது.
வேட்டையன் திரைப்படத்தின் கதை
அதியன் கதாபாத்திரத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதியன் மற்றும் அவரது மனைவி என்கவுன்ட்டர் செய்தால் அந்த பழி மற்றும் பாவம் தங்கள் குழந்தைகளை வந்து சேரும் என்பதற்காக குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை என சொல்லும் இடத்திலேயே ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை சிறப்பாக இயக்குநர் செதுக்கி விட்டார்.
பள்ளியில் போதைப் பொருள் பதுக்கும் நபர்களை காட்டிக் கொடுக்கும் போல்டான ஆசிரியையாக வரும் துஷாரா விஜயன் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார். அவருடைய வழக்கை அவசரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக பலாத்காரம் செய்த நபர் என குற்றம்சுமத்தப்படும் நபரை தேடி பிடித்து வேட்டையாடுகிறார் வேட்டையன்.
அது என்கவுன்ட்டர் இல்லை மர்டர் என்பதை நீதிபதி அமிதாப் பச்சன் ரஜினிகாந்துக்கு உணர்த்தும் இடத்தில் இடைவேளை ஆரம்பமாகிறது. அதன் பின்னர், சரண்யா டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த துஷாராவின் கொலை வழக்கை எப்படி கண்டு பிடிக்கிறார். உண்மையான வில்லன் யாரு? ரஜினிகாந்த் அவரை என்கவுன்ட்டர் செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.