100 இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி, ஹன்ஷிகா மோத்வாணி, யோகி பாபு ஆகியோர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
கதை
போலீஸ் வேலைக்காக காத்திருக்கும் அதர்வா, சரியான அடாவடி பார்ட்டி. தனது உயிருக்கு உயிரான போலீஸ் நண்பனின் தங்கையிடம் சில்மிஷம் செய்த பையனை கல்லூரிக்குள்ளே நுழைந்து அடித்து துவைத்து துவம்சம் செய்கிறார். ஆனால் நண்பனின் தங்கையும், அந்த பையனும் காதலர்கள் என்பது பிறகு தான் தெரிய வருகிறது அதர்வாவுக்கு.
அந்த பையனின் அக்கா ஹன்சிகாவை காதலிக்கிறார் நம்ம ஹீரோ. ஒரு ஐந்து நிமிட மெனக்கெடலில் ஹன்சிகாவும் அதர்வாவின் காதலை ஏற்க, பிறகு என்ன டூயட் தான். அதோடு தனது கடமை முடிந்தது என கிளம்பும் ஹன்சிகா, பழைய பட க்ளைமாக்சில் போலீஸ் வருவது போல், கடைசியில் ரீஎண்ட்ரிக் கொடுக்கிறார். இந்த கேப்பில் ஹன்சிகா தந்தையிடம் டியூஷன் படிக்கும் ஒரு பள்ளி மாணவி கொலை செய்யப்படுகிறார். தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதால் கொலை செய்தேன் என ஒரு மைனர் பையன் போலீசில் சரணடைகிறான்.
இது ஒருபுறம் இருக்க, உதவி ஆய்வாளர் வேலைக்கான பணியில் சேரும் அதர்வாவுக்கு செம ஷாக். சாகசங்கள் நிறைந்த போலீஸ் வேலையை எதிர்பார்த்து வந்தவருக்கு, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் போன் அட்டண்ட் செய்யும் பணி தரப்படுகிறது. வேண்டா வெறுப்பாய் வேலையில் சேரும் அதர்வாவுக்கு, அவர் அட்டண்ட் செய்யும் 100வது தொலைபேசி அழைப்பு, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர் குற்றங்களை கண்டுபிடிக்கும் சாகசங்களை செய்ய ஆரம்பிக்கிறார். அதுவும் ஒரு டீ குடிக்கும் கேப்பில். அது என்ன என்பது தான் முழு படமும்.
ரிலீஸ்
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் மீது பலூன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆரா சினிமாஸ் நிறுவனம் பலூன், டோரா, சைத்தான், பண்டிகை ஆகிய திரைப்படங்களுக்கு விநியோகஸ்தரர்களாக பணியாற்றியுள்ளார். இத்தகைய திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தை அடைய இந்நிறுவனம் பெரும் நிதி சிக்கலில் உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து மே 8, 2019-ல் இரவில் இப்படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் "100 திரைப்படத்திற்காக வரவேற்பையும், விமர்சனங்களையும் கொடுத்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி, 100 திரைப்படத்திற்காக படக்குழுவினர் இதயத்தையும், ஆன்மாவையும் கொண்டு உழைத்துள்ளனர். அனால் இப்படம் சரியான நேரத்தில் வெளியிடுவதற்கு முடியாததால் மன்னிக்கவும். மே 9ல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாது, என் பணி முடிந்ததால் நான் எனது அடுத்த திரைப்படமான கூர்கா திரைப்படத்தின் பணிகளுக்காக செல்கிறேன்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவித்துள்ளார்.