அழகர்சாமியின் குதிரை என்பது 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இது யதார்த்தக் காட்சிப்படுத்தல்களைக் கொண்ட ஒரு கிராமப் படம். தமிழ்நாட்டுச் சிற்றூர் ஒன்றில் நடக்கும் ஒரு திருவிழாவில் அழகர் சாமிக்கு வாகனமாக அமையும் குதிரை காணாமல் போதலின் பின்னணியில் இந்தப் படத்தின் கதை அமைகிறது. இந்தப் படத்தில் நாட்டுப்புற நம்பிக்கைகள், கலைகள், வாழ்வியல், திருவிழா போன்றவை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது இயக்குனர் சுசீந்திரனின் மூன்றாவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் எழுத்தாளர் பாஸ்கர்சக்தியின் சிறுகதையான, அழகர்சாமியின் குதிரையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
கதை:
தேனீ அருகே உள்ள மல்லயாபுரம் என்ற கிராமத்தில் வாழும் மக்கள் ஊர் திருவிழா கொண்டாட முடிவு செய்கின்றனர். திருவிழாவின் சிறப்பாக அழகர்சாமி கடவுள் மரத்தாலான குதிரையில் ஊர்வலம் வர வேண்டும். அந்த மரக்குதிரை திருவிழாவிற்கு சில நாட்கள் முன்பு காணாமல் போய் விடுகின்றது. அதே சமயத்தில் ஆகமலை, பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி, சாமான்கள் ஏற்றி செல்ல வைத்திருக்கும் குதிரையும் காணாமல் போய் விடுகின்றது. இதனால் ராணியுடனான அவனது திருமணம் பாதியில் நின்று விடுகின்றது. மல்லயாபுரம் கிராம மக்களும் , அழகர்சாமியும் அவரவர் குதிரைகளைக் கண்டுபிடித்தார்களா என்பது மீதிக் கதை.