பிரியாணி என்பது ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி அமரன், நாசர், ராம்கி போன்றோர் நடித்துள்ளனர். இது யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வரும் நூறாவது படமாகும். யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடத்துவதாக இருந்தனர் ஆனால் இசை வெளியீட்டுக்கு முன் இணையத்தில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானதால் இசை வெளியீடு இல்லாமல் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.
கதை
கார்த்திக்கும் பிரேம்ஜி அமரனும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்கள். இருவரும் சென்னையிலுள்ள உழவு இழுவை இயந்திரம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகின்றனர். புதிதாக பெங்களூரில் தொடங்கப்படும் அவர்கள் கடையின் திறப்பு விழாவிற்கு இருவரும் செல்கின்றனர். அங்கு பெரிய தொழிலதிபரை சந்திக்கின்றனர். கடை திறப்புவிழா முடிந்து சென்னைக்கு திரும்பும் வழியில் ஆம்பூரில் பிரியாணி தின்பதற்காக ஒரு கடையில் நிற்கின்ற போது ஒரு பெண்ணை சந்திக்கின்றனர். அவருடன் அருகிலுள்ள தங்கும் விடுதிக்கு செல்கின்றனர்.
அங்கு அளவுக்கதிகமாக மது உட்கொண்டு மயங்கி விடுகின்றார்கள். காலையில் அவர்கள் உள்ள அறையில் அவர்கள் பெங்களூரில் சந்தித்த தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவர்களுடன் வந்த பெண் அவ்வறையில் காணவில்லை. இக்கொலையை செய்தது யார்? ஏன் அவர்கள் இவர்கள் இருவரையும் இதில் தொடர்புபடுத்தினார்கள்? இவர்கள் எப்படி காவல்துறையிடம் தப்பினார்கள் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.