டகால்டி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிக்கும் நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தனது 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஜய் நரேன் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
டகால்டி படத்தின் பிரத்யேக தகவல்கள்
நகைச்சுவையாளராக தமிழ் திரையில் அறிமுகமான சந்தானம், ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று, தொடர்ந்து ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை 2018ம் ஆண்டு டிசம்பர் 27ல் தொடங்கிய படக்குழு 2019 செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளனர்.
டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 2019ல் வெளியிட்ட படக்குழு இப்படத்தின் டீஸரை இணையத்தில் 2019 டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ளது. சில காரணங்களால் 2019 டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த இப்படம் 2020 ஜனவரி மாதத்திற்கு தள்ளிச்சென்று 2020 ஜனவரி 31ல் வெளியிடவுள்ளனர் படக்குழுவினர்.
சந்தானம் நடிப்பில் உருவான டகால்டி படம் வெளியாகும் அன்றே இவர் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு பல தடைகளால் வெளியாகாமல் உள்ள சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என தமிழ் திரைப்பட ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தானமும், யோகி பாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்களிடம் டகால்டி படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தானம் படங்களில் உள்ள நகைச்சுவைக்கு மக்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும். அதை இந்த படத்திலும் பூர்த்தி செய்துள்ளதாக சந்தானமும் இயக்குனரும் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த், இயக்குனர் ஷங்கரிடம் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் வரை உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டகால்டி படத்தின் கதை
இப்படத்தின் வில்லனான விஜய் சாம்ராட் (தருண் அரோரா) ஒரு பெரிய பணக்காரர். இவர் தனது கற்பனையில் தோன்றும் ஒரு பெண்ணின் ஓவியத்தை வரைந்து அந்த பெண்ணின் ஓவிய படத்தை பல ரவுடிகளிடம் கொடுத்து இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அவளை இவரின் இருப்பிடமான மும்பைக்கு வரவழைத்து அனுபவிப்பார்.
அப்படி ஒரு ஓவியத்தில் நாயகி மல்லி (ரித்திகா சென்) படத்தை வரையும் அந்த பணக்காரர், அந்த ஓவியத்தை மும்பையில் உள்ள பல ரௌடிகளிடம் ஒப்படைக்கிறார். அந்த புகைப்படம் மும்பை உள்ளூர் ரௌடியான ராதாரவி-யிடம் வருகிறது. அந்த பெண்ணை கண்டுபிடித்து தந்தாள் ரூ10 கோடி வரை கிடைக்கும் என அறியும் ராதா ரவி அந்த பெண்ணை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
ஒரு தொழில் ரீதியாக ராதா ரவி-யிடம் சந்தானம் மாட்டிக்கொள்கிறார். அதனால் சந்தானத்தை கொல்ல உத்தரவிடுகிறார் ராதாரவி. ராதா ரவியிடம் இருந்து தப்பிக்க அவர் வீட்டில் உள்ள நாயகியின் ஓவிய படத்தை பார்த்து அந்த பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று பொய் சொல்லி ராதா ரவியிடம் இருந்து தப்பிக்கிறார்.
ராதாரவி அந்த பெண்ணை ஒரு வாரத்தில் தன்னிடம் வந்து ஒப்படைக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கிறார். சந்தானம் அந்த ஓவியத்தில் உள்ள பெண்ணை தேடி மும்பையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்கிறார். அங்கு நாயகி ரித்திகா சென்-தான் அந்த பெண் என கண்டறியும் சந்தானம், நாயகியுடன் அறிமுகமாகிறார்.
நாயகி தான் சினிமாவில் பெரிய இயக்குனர் ஆகா வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரின் ஆசைக்கு உதவுவதாக எனக்கு பாலிவுட்-ல் பல திரைத்துறை பிரபலங்களை தெரியும் என பொய் சொல்லி அந்த பெண்ணை ஏமாற்றி தன்னுடன் மும்பைக்கு அழைத்து வருகிறார் சந்தானம்.
ராதா ரவி சொன்ன படி அந்த பெண்ணை கொண்டு வந்து மும்பையில் ஒப்படைத்த சந்தானம், பின்னர் அந்த பணக்கார வில்லனை பற்றி அறிகிறார். அவரின் இந்த செயல்களை பற்றி அறியும் சந்தானம் பின்னர் தன் நண்பன் யோகி பாபுவுடன் சேர்ந்து அந்த பெண்ணை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் நகைச்சுவையான திரைக்கதை.