டார்லிங் தமிழ் திகில் படம்.இப்படத்தை சாம் ஆண்டன் இயக்க அல்லு அரவிந்த் மற்றும் கே இ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகனாக ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளனர்.
கதை :
டார்லிங் இக்கதையின் ஆரம்பத்தில் கதிர் (ஜி.வி.பிரகாஷ்), நிஷா (நிக்கி கல்ராணி), குமார் (பாலசரவணன்) மற்றும் அதிசயராஜ் (கருணாஸ்) ஆகிய 4 பேரும், தற்கொலை செய்து கொள்வதற்காக கடற்கரையோர பங்களாவுக்கு செல்கிறார்கள்.
ஆனால், உண்மையிலேயே நிஷாவும், குமாரும் தற்கொலை செய்துகொள்ள பங்களாவுக்கு வரவில்லை. எப்படியாவது கதிரை தற்கொலை முடிவில் இருந்து மாற்ற வேண்டும் என்பதற்காக உடன் வந்தவர்கள். எனவே கதிருடன் நெருங்கி பழகி காதலில் வீழ்த்தி தற்கொலை முடிவை கைவிட செய்ய முயலுகிறார் நிஷா.
அங்கு எப்போதெல்லாம் நிஷாவும் கதிரும் நெருங்குகிறார்களோ அப்போதெல்லாம், பெண் ஆவியொன்று நடுவில் புகுந்து காதலர்களுக்கு இடையூறு செய்கிறது. நிஷா உடம்பில் புகுந்து கொண்டு கதிரை நெருங்கவிடாமல் செய்து நண்பர்களையும் அடித்து துவம்சம் செய்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கதிர் அப்பேயிடம் நிஷாவை பிடித்ததர்க்கான காரணத்தை கேட்கும் போது தன கதையை கூற ஆரம்பிக்கின்றது.
ஸ்ருதி என்ற இளம் பெண்ணும், காதலன் சிவாவும் அதே பங்களாவுக்கு சில மாதங்கள் முன்பு வரும்போது, ஐந்து வாலிபர்களால் காதலன் கண்முன்பே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார் ஸ்ருதி. காதலன் சிவாவும் கொலை செய்யப்படுகிறார். காதலனை பிரிந்த சோகத்தில், எந்த காதலர்களையும் சேர விடக்கூடாது என்று சபதம் ஏற்று சுற்றிவருகிறது ஸ்ருதி ஆவி.
காதலியை கரம் பிடிப்பதற்காக, ஐந்து வில்லன்களையும் தேடி பிடித்து ஆவியிடம் கதிர் ஒப்படைத்தாரா, நிஷா உடலில் இருந்து ஆவி வெளியேறியதா இல்லையா என்பதெல்லாம் மீதிக் கதை.