எங்கேயும் எப்போதும் (2011) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை:
திருச்சியில் வேலை பார்க்கும் கதிரேசன் (ஜெய்) தன் பகுதியில் வசிக்கும் மணிமேகலை (அஞ்சலி) என்ற பெண்ணை தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே காதலிக்கிறான். சற்றே துடுக்கும், மிடுக்கும் மிகுந்த மணிமேகலையும் கதிரேசனை சில பல அலைக்கழிப்புகளுக்கு உள்ளாக்கி தன் காதலை ஒப்புக்கொள்கிறாள். விழுப்புரம் அருகில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் மணிமேகலையை அறிமுகப்படுத்த அழைத்துச் செல்கிறான் கதிரேசன்.
சில மாதங்களுக்கு முன் சென்னை நேர்காணலுக்கு திருச்சியிலிருந்து தனியாக வரும் அமுதா (அனன்யா) தன் துணைக்காக கௌதம் (சர்வானந்த்) என்ற அந்நியனுடன் ஒரு நாள் முழுவதும் சென்னையை சுற்ற நேரிடுகிறது. தங்களை அறியாமல் இவர்கள் இருவருக்கும் காதல் பூக்கிறது. தன் விட்டுப்போன காதலைத் தேடி அமுதா சென்னைக்கும் கௌதம் திருச்சிக்கும் சென்று ஏமாற்றமடைந்து திரும்புகின்றனர்.
இந்த நால்வரும் பயணம் செய்யும் பேருந்துப் பயணமே இத்திரைக்கதை. இந்த இரு பேருந்துகளும் விழுப்புரம் அருகே பயங்கரமாக மோதிக்கொள்ள அவ்விரு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் என்ன ஆயினர், கதிரேசன், மணிமேகலை வீடு போய் சேர்ந்தனரா, அமுதாவும் கௌதமும் ஒன்று சேர்ந்தனரா என்பதே திரைப்படத்தின் முடிவு.