ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்) இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய் தனது சுஜாதா என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் அஸ்வத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ல் இப்படத்தின் நாயகனான விஷ்ணு விஷால் பிறந்தநாள் அன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் இப்படத்தினை தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டு அதிரடி படமாக இயக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியது.
அதிரடி திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜிகே எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் மூலம் இப்படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார்.
ஃப்.ஐ.ஆர் கதை
இரசாயன பொறியாளர் (Chemical Engineer) இர்பான் அகமது (விஷ்ணு விஷால்), ஐஐடியில் தங்கப் பதக்கம் வென்றவர். ஆனால் ஒரு சிறிய கெமிக்கல் நிறுவனத்தில் வேலை செய்து நல்ல வேலைக்கு முயற்சி செய்கிறார். ஜாஸி என்ற முஸ்லீம் நிறுவனத்திற்கு கெமிக்கல்களை சப்ளை செய்கிறார். இத்தகைய சூழ்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி நாசத்தை உருவாக்கும் முயற்சியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி அபுபக்கர் அப்துல்லா திட்டமிட்டுள்ளார். இலங்கை மற்றும் ஹைதராபாத் குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் பேரில் இர்பானை என்ஐஏ கைது செய்தது.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS உடன் இர்பானுக்கு என்ன தொடர்பு? ஹைதராபாத் விமான நிலைய குண்டுவெடிப்பில் இர்பானுக்கு தொடர்பு உள்ளதா? அபூபக்கர் அப்துல்லா யார்? அவருக்கும் தெலுங்கு மாநிலங்களுக்கும் என்ன தொடர்பு? கடைசியில் அபுபக்கர் ஆட்டத்திற்கு செக் போட்டது யார். ஜாஸி மத அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்போடு இணைந்ததா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் FIR படத்தின் கதை.