கார்கி இயக்குனர் கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா அவரின் மனைவி ஜோதிகா உடன் இணைந்து '2D என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு குடும்பம் மற்றும் கிரைம் - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை ஒளிப்பதிவாளர் ஸ்ரையந்தி மற்றும் பிரேம்கிருஷ்ண அக்கடு இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷஃபிக் முகமத் அலி எடிட்டிங் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா & ஜோதிகாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் கார்கி படத்தினை தமிழ் - தெலுங்கு - கன்னட என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளது. கார்கி படத்தினை தமிழகம் முழுவதும் 'சக்தி பிலிம் பேக்டரி' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
கார்கி திரைப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022, ஜூலை 15ல் உலகம் முழுவதும் தமிழ் - தெலுங்கு- கன்னட மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.
கார்கி படத்தின் கதை
கதைக்கரு
செய்யாத தவறுக்காக கைதாகி சிறைக்கு செல்லும் தன் அப்பாவை காப்பாற்ற சட்ட ரீதியாக போராடும் ஒரு நடுத்தர குடும்ப பெண்ணின் போராட்ட கதை.
கதை
சாய் பல்லவி (கார்கி), சென்னையில் ஒரு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். அவரது தந்தை சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு (Apartment) ஒன்றில் செக்யூரிட்டி பாதுகாவலர் பணி செய்கிறார். சாய் பல்லவிக்கு ஒரு பள்ளி படிக்கும் ஒரு தங்கை உள்ளார். இவர்கள் சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து வாழ்கின்றனர்.
சாய் பல்லவி மற்றும் கலேஷ் ராமானந்த் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் சம்மதிக்க திருமணம் நடைபெறவுள்ளது.
சாய் பல்லவியின் தந்தை வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து பலர் பலமுறை பலாத்காரம் செய்கின்றனர். இதில் சாய் பல்லவியின் தந்தை மாட்டிக்கொள்கிறார்.
தான் செய்யாத தவறுக்காக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாட்டி விசாரணை கைதியாக சிறைக்கு செல்கிறார், சாய் பல்லவியின் தந்தை. இதனால் சாய் பல்லவியின் குடும்பம் பல இன்னல்களை சந்திக்கிறது.
சாய் பல்லவி - தங்கை - அம்மா என பெண்கள் மட்டும் உள்ள வீட்டின் முன் முழு நேரமும் பத்திரிகை நபர்கள் நின்று சரமாரியான கேள்விகளை எழுப்பி பல இன்னல்கள் உருவாக்க, இந்த சமூகமே இவர்களை தூர்த்துகிறது. சாய் பல்லவி இந்த பிரச்சனைகளை எல்லாம் மீறி தன் தந்தைக்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடுவதே இப்படத்தின் கதை.
சாய் பல்லவியின் தந்தை குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையில் யார் குற்றவாளி? என பல திருப்பங்களோடு ஒரு சுவாரஸ்ய திரைக்கதையில் உருவாகியுள்ளது, கார்கி.