ஹவுஸ் ஓனர் இயக்குனர் லட்சுமி இராமகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், லவ்லின் நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன் இராமகிருஷ்ணன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
2015 டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தமிழகம் மறக்காது. எத்தனையோ ஆயிரம் மக்கள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த உடைமைகளை இழந்து, பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு இழப்பை பதிவு செய்யும் படம் தான் இந்த ஹவுஸ் ஓனர்.
கதை
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கிஷோர் ஒரு அல்சைமர் (ஞாபக மறதி) நோயாளி. உயிருக்கு உயிராக நேசிக்கும் தனது மனைவியின் முகமே இவருக்கு மறந்து போகிறது. இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள ஒரு ராணுவ குடியிருப்பில் சொந்தமாக கட்டிய வீட்டில் வசித்து வருகிறார்.
திருமண பந்தம் ஆரம்பித்த நாளில் இருந்து தன்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட கணவன் (கிஷோர்), இன்று அனைத்தையும் மறந்து குழந்தையாய் மாறிப் போனதை நினைத்து தவிக்கும் மனைவி ராதாவாய் (ஸ்ரீரஞ்சனி). கணவன் செய்யும் சிறுபிள்ளைத்தனமான காரியங்களை பொறுத்துக்கொண்டும், அவருக்கு ஆதரவாய் குடும்பம் நடத்தி வருகிறார்.
மகள் திருமணமாகி வெளிநாடு சென்றுவிட, கணவனும், மனைவியும் தங்களுடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். அது ஒரு மழைக்காலம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட, கிஷோரின் பிடிவாதத்தால், கணவனும், மனைவியும், அதே வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
நேரமாக ஆக மழை அதிகரிக்கிறது. வீட்டிற்குள் வெள்ளம் நுழைகிறது. ஞாபக மறதி நோயாளியான கணவரை வைத்துக்கொண்டு செய்வதறியாது தவிக்கிறார் ஸ்ரீரஞ்சனி. மழை வெள்ளத்தில் இருந்து தம்பதியர் தப்பித்தனரா இல்லையா? என்பதே படபடக்கும் படம்.