காலா இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் கபாலியை தொடர்ந்து ரஜினி மற்றும் ரஞ்சித்தின் இரண்டாவது கூட்டணி படமாகும். இப்படத்தினை தனுஷின் ஒளண்டார் பிலிம்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை:
மும்பையின் மையப்பகுதியான தாராவியில் வாழும் தமிழர்களை காக்கும் காவல் வீரன் காலா (ரஜினி). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்), நான்கு மகன்கள், பேரக்குழந்தைகள் என கூட்டுக் குடும்பமாக தாராவியில் வாழ்ந்து வருகிறார். மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான ஹரிதேவ் (நானா படேகர்) தாராவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், குடிசைகளை அகற்றிவிட்டு நவீன வீடுகள் கட்டித்தரும் 'தூய்மை மும்பை' திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இதனை செயல்படுத்த தனது கட்சி பிரமுகரான விஷ்ணு பாயை (சம்பத் ராஜ்) நியமிக்கிறார். ஆனால் அதனை செயல்படுத்த காலா தடையாக இருக்கிறார். தமது படை தளபதியாக இருக்கும் இரண்டாவது மகன் செல்வத்தைக் கொண்டு (திலிபன்) அடாவடியாக எதிரிகளை காலா அடக்குகிறார். மறுபுறம் அடிதடியை விரும்பாத இளைய மகன் லெனின்(மணிகன்டன்), அஞ்சலி பாட்டிலுடன் இணைந்து மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும், தாராவியை சொர்க்கமாக்கும் வேலையை செய்கிறார்.
இதற்கிடையே தன்னார்வ தொண்டரான ரஜினியின் முன்னாள் காதலி சரினா (ஹூமா குரேஷி), தான் பிறந்த இடமான தாராவிக்கு மீண்டும் வருகிறார். ரஜினியின் மகன் லெனினுடன் இணைந்து தாராவியின் முகத்தை மாற்றும் வேலையில் ஈடுபடுகிறார். காலாவும், சரினாவும் மலரும் நினைவுகளில் மூழ்க, மனைவி செல்வி மனக்குழப்பத்துடன் கோபம் கொள்கிறார்.
இந்நிலையில், காலாவை போட்டுத்தள்ள சம்பத் ராஜ் போடும் ஸ்கெட்சில், அப்பாவி இளைஞன் ஒருவன் கொல்லப்படுகிறான். இதற்கு பழி தீர்க்கிறார் காலா. இதையடுத்து, மெயின் வில்லன் ஹரிதேவ் நேரடியாக களத்தில் இறங்குகிறார். காலாவும், ஹரிதேவும் நேரடி மோதலில் ஈடுபட, கடைசியில் ரஜினி எப்படி தாராவியை காப்பாற்றுகிறார் என்பது மீதிக்கதை.