கோலமாவு கோகிலா (கோ கோ) இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, அன்பு தாசன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம். இப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
கதை:
சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் கோகிலா (நயன்தாரா). தந்தை சிவாஜி ஏடிஎம் காவலாளி. தாய் சரண்யா, கல்லூரி படிக்கும் தங்கை சோபி (ஜாக்குலின்) ஆகியோருடன் பட்ஜெட் போட்டு வாழ்ந்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு எதிரில் பலசரக்கு கடை நடத்தி வரும் யோகி பாபு, நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கிறார்.
சொற்ப சம்பளத்துக்கு ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் கோகிலாவுக்கு, பட்ஜெட்டில் துண்டு விழ, மேலாளரிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார். ஆனால் அவரோ அட்ஜெஸ்ட் செய்தால், வருமானம் உயரும் என சூசகமாக சொல்ல, அதற்கு வேற ஆளப்பாரு என வேலையை துறக்கிறார்.
ஏற்கனவே வாங்கிய சம்பளத்தைவிட கூடுதலாக ஊதியத்தில் ஒரு மசாஜ் சென்டரில் மேலாளர் வேலை கிடைக்கிறது நயன்தாராவுக்கு. ஆனால் விதி வலியது அல்லவா, தாய் சரண்யாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடும் நயன்தாராவுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் லிங்க் கிடைக்கிறது. தாயின் சிகிச்சைக்கு பணம் கிடைக்கும் நேரத்தில், அந்த கும்பல் மூலம் நயன்தாராவுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார், தாயை காப்பாற்ற முடிந்ததா என்பதை யோகி பாபு அண்ட் கோவின் காமெடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் மீதிக்கதை.