மெய்யழகன் - இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2 டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.
மெய்யழகன் திரைப்படத்தின் கதை
சொத்து பிரச்சனை காரணமாக பூர்வீக கிராமத்தை விட்டு விட்டு சென்னைக்கு செல்லும் அருள்மொழி (அரவிந்த்சாமி) பல வருடங்கள் கழித்து தனது தங்கையின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு செல்ல நேரிடுகிறது. தஞ்சாவூர் நீலமங்கலம் தான் இந்த படத்தின் கதைக்களம். தஞ்சாவூரையும் சென்னையையும் அவ்வளவு அழகாக கதையின் போக்கிலேயே எடுத்துக் காட்டியிருக்கும் விதம் அருமை. திருமணத்துக்கு வரும் அருள்மொழியை பார்த்த மாத்திரத்திலேயே அத்தான் என ஒட்டிக் கொண்டு பாசத்தைக் காட்ட ஆரம்பித்து விடுகிறார் கார்த்தி. ஆனால், அவர் யாரென்றே அடையாளம் தெரியாத அரவிந்த் சாமி அவரது அன்பின் காரணமாக தெரிந்தவர் போலவே நடந்துக் கொள்கிறார். கடைசியில், கார்த்திக்கும் அவருக்கும் என்ன உறவு, கார்த்தியின் பெயர் என்ன? என்பதை அரவிந்த் சாமி தெரிந்துக் கொண்டாரா? என்பது தான் இந்த மெய்யழகன் படத்தின் கதை.