நெடுநல்வாடை இயக்குனர் செல்வகண்ணன் இயக்கத்தில் நடிகர் பூ ராமு, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர் நடித்திருக்கும் காதல் மற்றும் விவசாய திரைப்படம். இத்திரைப்படத்தினை பி ஸ்டார் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைத்துள்ளார்.
கதைக்கரு
ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பையும், பிரிவின் வலியையும், மண் மண(ன)ம் வீச பேசுகிறது நெடுநல்வாடை.
கதை
சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் செல்லையா (பூ ராமு). வீட்டைவிட்டு ஓடிப்போன இவரது மகள் பேச்சியம்மாள் (செந்தி), ஒருகட்டத்தில் கணவனைவிட்டுப் பிரிந்து தனது இருகுழந்தைகளுடன் மீண்டும் தாய் வீட்டிற்கு வருகிறாள். மகனின் எதிர்ப்பையும் மீறி மகளுக்கும், பேரன், பேத்திக்கும் அடைக்கலம் தருகிறார் செல்லையா.
சதா வெறுப்பை உமிழும் மாமா கொம்பையாவை (மைம் கோபி) தோற்கடிக்க, நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, பாசத்தோடு ஊட்டி பேரன் இளங்கோவை வளர்க்கிறார் தாத்தா. அதே எண்ணத்தோடு வளரும் இளங்கோவுக்கு, தன்னைச் சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் அமுதா (அஞ்சலி நாயர்) மீது ஈர்ப்பு வருகிறது. ஆனால் தாத்தா சொல்படி தனது குடும்பத்துக்காக காதலை தியாகம் செய்கிறான்.
ஒருகட்டத்தில் வெளிநாடு செல்லும் இளங்கோ, சொந்த ஊருக்கே திரும்பி வராமல் அங்கேயே இருந்து விடுகிறார். இதனால் மனவேதனை அடையும் செல்லையா, மரணப்படுக்கையில் விழுகிறார். தாத்தாவை பார்க்க பேரன் வந்தாரா, அவரது காதல் என்ன ஆனது என்பது தான் உணர்வுகள் சங்கமிக்கும் நெடுநல்வாடை.