செம்ம இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார், ஆர்தனா, யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலி கான், சுஜாதா மற்றும் பலர் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம்.
கதை :
திருச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் குழந்தை (ஜி.வி.பிரகாஷ்). அவரது நண்பன் ஓமகுண்டம் (யோகிபாபு). நண்பனுடன் சேர்ந்து குட்டியானையில் (வாகனம்) காய்கறி, மீன், கருவாடு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வியாபாரம் செய்யும் சுறுசுறுப்பான இளைஞன் குழந்தை. காயத்திரியை மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலிக்கிறார் குழந்தை. மூன்று மாதத்துக்குள் கல்யாண நடக்கவில்லை என்றால் அடுத்த ஆறு வருடத்துக்கு திருமணம் நடக்காது என குடுகுடுப்பை காரரும், ஜோசியக்காரரும் பயமுறுத்த, காயத்திரியை பெண் கேட்டு செல்கிறார் குழந்தையின் தாய் ஆரவல்லி (சுஜாதா). ஆனால் காயத்திரி இவர்களை அவமானப்படுத்த, அவர் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயல்கிறார் ஆரவல்லி. தாயை காப்பாற்றும் குழந்தை, அவரது சொல் கேட்டு வேறு பெண் பார்க்க ஒப்புக்கொள்கிறார்.
தாய், மகன், நண்பன் என மூவரும் பெண் பார்க்கும் படலத்தை தொடங்குகிறார்கள். உள்ளூரில் யாரும் பெண் கொடுக்க மறுப்பதால், மனமுடைகிறார் குழந்தை. கடைசியாக வெளியூர் சென்று அட்டாக் பாலு (மன்சூர் அலிகான்) - அந்தி மந்தாரை (கோவை சரளா) தம்பதியின் மகள் மகிழினியை (அர்த்தனா பினு) பெண் பார்க்கிறார்கள். இருவீட்டாருக்கும் பிடித்துப்போக திருமணம் முடிவாகிறது. மகிழினிக்கும் - குழந்தைக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையே மகிழினியை ஒருதலையாக காதிலிக்கும் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் மகன் ஜெமினி கனேசன் (ஜனா), இவர்களின் காதலுக்கு வில்லனாக வருகிறார். ஊரைச்சுற்றி கடன் வாங்கி தவிக்கும் மன்சூர் அலிகானின் பலவீனத்தை பயன்படுத்தி மகிழினியை திருமணம் செய்துகொடுக்க சம்மதிக்க வைக்கிறார். மனம் மாறும் மன்சூர் அலிகான் கல்யாணத்தை நிறுத்துகிறார். இதனால் அசிர்த்தி அடையும் ஜி.வி.பிரகாஷின் தாய் மீண்டும் தற்கொலைக்கு முயல்கிறார். ஜி.வி.பிரகாஷ் அர்த்தனாவை எப்படி திருமணம் செய்கிறார்?, பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை.