வேலைக்காரன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகர்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், ஸ்நேகா, ரோபோ சங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, சார்லி, தம்பி ராமையா உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கதை :
சென்னை கொலைகார குப்பம் என மருவிய கூலிக்கார குப்பத்தைச் சேர்ந்தவர் அறிவு (சிவகார்த்திகேயன்). தான் வாழும், தான் சார்ந்த பகுதியை முன்னேற்றிவிடத்துடிக்கும் ஒரு படித்த இளைஞன். அந்தப் பகுதியில் எல்லாமுமாக இருக்கும் தாதா பிரகாஷ்ராஜ் அந்தப் பகுதி மக்களை தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதை பொறுக்கமுடியாமல் அவரை மறைமுகமாக எதிர்ப்பதற்காக ஒரு கம்யூனிட்டி ரேடியோவை தொடங்குகிறார்.
அந்த எஃப்.எம் மூலம் பிரகாஷ்ராஜ் பற்றிய உண்மைகளை அவ்வப்போது அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். அவர் மக்களை சுரண்டுவதையும், அவரால் குப்பத்து மக்களுக்கு விளைந்த தீமைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறார்.
குடும்பச் சூழலின் காரணமாக சிவகார்த்திகேயனுக்கு நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தியாவின் டாப் நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாக வேலைக்குச் சேர்கிறார்.. அங்கு உயரதிகாரியாக இருக்கும் ஃபகத் பாசில் சிவகார்த்திகேயனுக்கு வேலையில் சில நுணுக்கங்களையும், வளர்ச்சிக்கான வழிகளையும் கற்றுத் தருகிறார். ஃபகத் பாசிலுக்கு நெருக்கமானவராகவும் மாறிவிடுகிறார் சிவா. இப்படி இருக்கையில், சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த் பிரகாஷ்ராஜால் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்ற பிரகாஷ்ராஜும் எதிரியால் குத்தப்பட்டு மரணத் தருவாயில் இருக்கிறார். 'கூலிப்படையில் இருப்பவன் மட்டும் கொலைகாரன் இல்லை நீயும்தான் கார்ப்பரேட் கொலைகாரன்' என சிவாவை குழப்புகிறார் பிரகாஷ்ராஜ்.
தனது நண்பனை பிரகாஷ்ராஜ் கொன்றதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் பெரும் அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னே, சமூகத்தின் மீதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் பார்வை மாறுகிறது. சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்க்கு தீங்கு செய்துகொன்டிருப்பதை உணர்கிறார். இவை அத்தனையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சதி வேலை என அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஒரு கூலிப் படைக்கும், கார்ப்பரேட் நிறுவனத்திற்குமான ஒற்றுமைகளை முடிச்சுப் போட்டுப் பார்க்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.
நிறுவனங்களின் பெரும் பலம் அவற்றின் ஊழியர்கள். ஊழியர்களே நிறுவனத்தின் நல்லவைக்கும், தீயவைக்கும் நேரடிக் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட நிறுவனத்தால் நுகர்வோர் பாதிக்கப்பட்டால், அதில் ஊழியர்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்பது புரிய வருகிறது. கார்ப்பரேட் வளர்ச்சி எனும் சுழலில் சிக்கி வருங்கால சமூகத்தையே அழித்துக் கொண்டிருப்பதில் நாமும் ஒரு ஆள் என உணர்ந்து கார்ப்பரேட் தீமைகளுக்கு எதிராக வேலைக்காரர்களைத் திரட்டுகிறார். கார்ப்பரேட் மூளையோடு செயல்படும் ஃபகத் பாசிலின் திட்டங்களை அவர் எப்படி முறியடித்து வேலைக்காரர்களுக்கும், சமூகத்திற்கும் நியாயம் செய்கிறார் என்பதே மீதிக் கதை.