விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் அதிரடி, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் நயன்தாரா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இத்திரைப்பத்திற்கு டி இமான் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
கதை :
தேனி மாவட்ட கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித் நயன்தாராவை பார்த்த மறுகணமே காதல் கொண்டு அவரை திருமணமும் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் அஜித்தின் சண்டை மற்றும் விரோதம் காரணமாக பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை அழைத்துக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.
10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது அந்த ஊர் வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் அஜித்தின் மாமா தம்பி ராமையா, நயன்தாரா மற்றும் அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.
இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார். அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் தடுக்கிறார்.
அதன் பிறகு, தனது மகளை அஜித் எப்படி காப்பாற்றுகிறார்? மகளை கொல்ல நினைக்கும் ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? தன் மகளோடும் மனைவி நயன்தாராவுடனும் மீண்டும் இணைந்தாரா? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.