பக்ரீத் இயக்குனர் ஜெகதீசன் ஷுப இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எம் எஸ் முருகராஜ் மல்லைகை தயாரிக்க, இசையமைப்பாளர் இம்மான் இசையமைத்துள்ளார்.
கதை
சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியாக இருக்கிறார் விக்ராந்த் (ரத்தினம்). விக்ராந்த்துக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து பிரச்சினை. எனவே இருவரும் பேசிக் கொள்வதில்லை. நீதிமன்ற தீர்ப்புப்படி இருவருக்குமான நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன. தனக்கு கிடைத்த நிலத்தில் விவசாயம் செய்ய நினைக்கிறார் விக்ராந்த். இதற்காக அதே ஊரில் இருக்கும் ஒரு இஸ்லாமியரிடம் தனது நண்பன் மூலம் நிதியுதவி கேட்டுப் போகிறார்.
அங்கு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து ஒரு பெரிய ஒட்டகம் கொண்டு வரப்படுகிறது. கூடவே ஒரு குட்டி ஒட்டகத்தையும் அழைத்து வந்துவிடுகிறார்கள். அந்தக் குட்டியை வெட்ட யாருக்கும் மனசு வரவில்லை. திரும்பவும் அனுப்ப முடியாது, வைத்து பராமரிக்கவும் முடியாது என்ற சூழ்நிலையில், அந்த ஒட்டகத்தை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் விக்ராந்த்.
அந்த ஒட்டகத்துக்கு சாரா என பெயர் வைத்து, தங்களுடைய குடும்பத்தில் ஒரு ஆளாகவே அதை வளர்க்கிறார்கள் விக்ராந்த்தும், அவரது குடும்பத்தாரும். விக்ராந்த்தின் மனைவி வசுந்தராவுக்கும், மகளுக்கும் சாராவை ரொம்பவே பிடித்து போகிறது. ஊரே தேடி வந்து ஒட்டகத்தை பார்த்துவிட்டு போகிறது. அதுவும் மற்ற கால்நடைகள் மாதிரியே புல், வேப்பிலை என சாப்பிட்டு பழகுகிறது.
விக்ராந்த்தின் விவசாயம் செழித்து பொருளாதார நிலை உயர, அவருடன் சேர்ந்து சாராவும் வளர்கிறாள். கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆன நிலையில் சாராவுக்கு முதல் முறையாக உடல் நிலை பாதிக்கப்படுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்க வரும் மாட்டு டாக்டர் எம்.எஸ்.பாஸ்கர், ஒட்டகம் ராஜஸ்தானில் இருப்பது தான் அதற்கு உகந்தது. இங்கிருந்தால் வீணாக செத்துப் போய்விடும் என பயமுறுத்துகிறார்.
இதனால் கவலையடையும் விக்ராந்த், சாராவை ராஜஸ்தானில் கொண்டு போய்விட முடிவு செய்கிறார். பிரிய மனமில்லாமல் ஒரு லாரியை பிடித்து அதில் சாராவை ஏற்றி கூடவே செல்கிறார். மகாராஷ்டிராவில் எதிர்பாராதவிதமாக பசு பாதுகாவலர்களிடம் சிக்குகிறார்கள் விக்ராந்த்தும், சாராவும். மிருகவதை தடுப்பு என்ற பெயரில் விக்ராந்த்திடம் இருந்து பிரிக்கப்படுகிறது சாரா. அதன்பின் நடக்கும் உணர்வுப்பூர்வமான, நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் தான் 'பக்ரீத்'.